புதுமணத் தம்பதியினருக்காக தேனிலவு அறையாக மாற்றப்பட்ட ரயில் பெட்டி! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join புதிதாக திருமணமான தம்பதியருக்காக இந்தியாவின் “நந்தேட்கிராம் எக்ஸ்பிரஸ்” ரயிலின் முதல் வகுப்பு (First AC) பெட்டியை “தேனிலவ…
புதுமணத் தம்பதியினருக்காக தேனிலவு அறையாக மாற்றப்பட்ட ரயில் பெட்டி!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
புதிதாக திருமணமான தம்பதியருக்காக இந்தியாவின் “நந்தேட்கிராம் எக்ஸ்பிரஸ்” ரயிலின் முதல் வகுப்பு (First AC) பெட்டியை “தேனிலவு அறை” போன்று அலங்கரித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்னா ரயில் நிலையத்தில் தம்பதியினர் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே, முதல் வகுப்பு தனியார் அறை பலூன்கள், மலர் அலங்காரங்கள், ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்கள் மற்றும் “I Love You” என்ற வாசகத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த காட்சிகளைப் பதிவு செய்த காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, அந்தத் தம்பதியினர் முதல் வகுப்பு தனியார் அறையை முன்பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, தனியார் நிகழ்ச்சி அலங்கார நிறுவனம் ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்பே ரயில் பெட்டிக்குள் சென்று அலங்காரப் பணிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை, புதுமணத் தம்பதியினர் சாலை மார்க்கமாக ஜல்னா ரயில் நிலையத்தை வந்தடைந்து பின்னர் ரயிலில் ஏறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த இந்திய ரயில்வே, உரிய அனுமதி இன்றி அலங்கார நிறுவன ஊழியர்கள் ரயில் பெட்டிக்குள் நுழைந்தது ரயில்வே விதிமுறைகளை நேரடியாக மீறிய செயல் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் பணியில் இருந்த தலைமை டிக்கெட் பரிசோதகர் கிரிஷ் குமார் உடனடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அலங்கார நிறுவனத்தினர் எவ்வாறு ரயில் பெட்டிக்குள் அனுமதியின்றி நுழைந்தனர், அதற்கு வேறு அதிகாரிகள் யாரேனும் உதவியுள்ளனரா என்பதை கண்டறிய துறைசார் விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் புதுமணத் தம்பதியருக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு ஏற்பாட்டை பாராட்டியுள்ள நிலையில், மற்றவர்கள் பயணிகள் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணையின் பின்னர், இதுபோன்ற அனுமதியற்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

