நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பங்களிப்புடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திரு…
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பங்களிப்புடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கலந்துரையாடலை விரைவாக நடத்துமாறு நாமல் ராஜபக்ஷ தொலைபேசி ஊடாக எதிர்க்கட்சித் தலைவரிடம் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். தான் யால பிரதேசத்தில் தங்கியிருப்பதால், எதிர்வரும் 23 ஆம் திகதி அந்தச் சந்திப்பை நடத்தலாம் என சஜித் பிரேமதாச அறிவித்ததை அடுத்து, இதற்கான திகதி உறுதி செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்திற்குச் செல்லவுள்ளார். சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், கொழும்பு ஸ்ரீமத் மாக்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு ரணில் விக்கிரமசிங்க செல்வது இதுவே முதல் முறையாகும்.
இந்தச் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நிச்சயமாகக் கலந்துகொள்வார்கள் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைத் தவிர, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

