ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 27 ஆம் திகதி கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த வர்த்…

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில், கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 27 ஆம் திகதி கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குத் தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தாம் கேட்கும் கப்பப் பணத்தை வழங்கத் தவறினால், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த இருவரை அனுப்பி வர்த்தகரை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணை வர்த்தகர் இது குறித்து கிரிபத்கொட காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.அந்த இலக்கத்துக்கு காவல்துறையினர் சூட்சுமமாக அழைப்பு விடுத்தபோது, மிரட்டல் விடுத்த நபர் வர்த்தகரிடம் மீண்டும் கப்பம் கேட்டுள்ளார்.

மிரட்டல் விடுத்த நபர் பணத்தைப் பெற்றுக்கொள்ள வழங்கிய வங்கிக் கணக்கின் உரிமையாளர், பாணந்துறை, பின்வத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் அவரது இளைய சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட முதலாம் சந்தேகநபர் இதற்கு முன்பும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் போது, சிறைச்சாலையில் உள்ள 'எம்பிலிபிட்டிய ருவன்' என்பவருடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவரது அறிவுறுத்தலுக்கு அமைவாகவே தான் வங்கிக் கணக்கை வழங்கியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் இருந்தபடியே கைதிகள் பொதுமக்களை அச்சுறுத்தி, கப்பப் பணத்தை இந்த வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிடச் செய்வதும், பின்னர் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதும் இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் கிரிபத்கொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.