நாட்டின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் தலைவர் கோமகன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண ஊடக அமையத்தில…
நாட்டின் சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பு குறித்து கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் தலைவர் கோமகன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை நிலைமை தொடர்பில் கடும் கவலை வெளியிட்டார்.சிறைச்சாலைகளில் "கைதிகளும் மனிதர்களே" என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், நடைமுறையில் கைதிகள் மீது மனிதாபிமானமற்ற கொடுமைகள் அரங்கேற்றப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பல கைதிகள் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், கைதிகள் எந்தக் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் பொறுப்பாகும் என்றார்.
தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் வன்முறைச் சூழலைக் கருத்தில் கொள்ளும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் இருப்பதாக அச்சம் வெளியிட்ட கோமகன், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் அலட்சியப் போக்கையும், அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

