முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 63 வயதான அவர், வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் உயிரி…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 63 வயதான அவர், வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.முதற்கட்ட விசாரணை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் நடந்த போது, வீட்டில் இருந்த இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தவிர, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே இருந்துள்ளனர். இந்த மரணம் குறித்து முறையான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய, கொழும்பு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரால் பரந்தளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமாக, நுகேகொட கோட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணையொன்றை மேற்கொண்டு வருகிறார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் இன்று(19) பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன் பின்னர், அவரது உடலம் மீதான இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

