அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலையை நினைவுகூரும் வகையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. 1990 ஆகஸ்ட் 12ஆம் திகதி வீரமுனை சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயம்…

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்தில் 1990ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலையை நினைவுகூரும் வகையில் வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

1990 ஆகஸ்ட் 12ஆம் திகதி வீரமுனை சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயம் மற்றும் வீரமுனை இராமகிருஷ்ண வித்தியாலயம் ஆகிய இடங்களில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 85க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், காயமடைந்து அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 20க்கும் மேற்பட்டோர் பின்னர் காணாமல் போனதாகவும், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரமுனை, வளத்தாப்பிட்டி, வீரச்சோலை, மல்வத்தை, புதுநகர், கணபதிபுரம், கோரக்கர்கோயில் மற்றும் மல்லிகைத்தீவு உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அக்காலப்பகுதியில் பாதுகாப்புக்காக வீரமுனை பாடசாலை மற்றும் சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்ததாகவும் நினைவேந்தல் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் இடம்பெற்று 36 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், வீரமுனை படுகொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்றும் இன்றும் வீரமுனை மக்களால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இன்றைய நிகழ்வு வீரமுனை சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள படுகொலை நினைவுத்தூபிக்கு அருகில் நடைபெற்றது.

வீரமுனை படுகொலை தொடர்பில் நீண்டகாலமாக நீதி கோரப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.