ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 04ஆம் திகதி வரை, C-130 விமானப் பராமரிப்பு, நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், சம்பவக் கட்டுப்பாட்டு அமைப்புகள், கட்டுமானப் பொறியியல், நிலச்சரிவு மீட்புப் பணிகள் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு, வெடிபொருள் அபாயங்கள் உள்ளிட்ட ப…
ஓகஸ்ட் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் 04ஆம் திகதி வரை, C-130 விமானப் பராமரிப்பு, நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், சம்பவக் கட்டுப்பாட்டு அமைப்புகள், கட்டுமானப் பொறியியல், நிலச்சரிவு மீட்புப் பணிகள் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு, வெடிபொருள் அபாயங்கள் உள்ளிட்ட பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்புப் பணிகளுக்கு அவசியமான விடயங்கள் தொடர்பான தமது நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வதற்காகவும், ஒன்று சேர்ந்து பயிற்சி செய்வதற்காகவும் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து ‘அட்லஸ் ஏஞ்சல் II’ (Atlas Angel II) பயிற்சியினை மேற்கொள்ளவுள்ளன.
இலங்கை விமானப்படை மற்றும் அமெரிக்க பசிபிக் விமானப் படைகள் ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களுடன், விமானப்படை பிரிகேடியர் ஜெனரலுக்கான உதவிப் பிரதான நிர்வாக அதிகாரி ட்ரேஸ் தோமஸ் மற்றும் இராணுவ பிரிகேடியர் ஜெனரலுக்கான உதவிப் பிரதான நிர்வாக அதிகாரி ரினேயா டோர்வல் ஆகியோரின் தலைமையிலான மொன்டானா தேசிய காவற் படையினைச் சேர்ந்த குழுக்கள் இப் பயிற்சியில் பங்குபற்றும். ஐக்கிய இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இப்பயிற்சியினை அவதானிப்பர்.
கட்டுநாயக்காவில் அமைந்துள்ள இலங்கை விமானப் படைத் தளத்தை மையமாகக் கொண்டும், கண்டியிலும் இடம்பெறும் இப்பயிற்சியானது, மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், பேரனர்த்தங்களின் போதான மீட்புப் பணிகளிலும் அமெரிக்க மற்றும் இலங்கைப் படைகளுக்கு இடையேயான நடைமுறை ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனையும் பலப்படுத்தும்.
“பேரனர்த்தங்கள் ஏற்படும்போது அவற்றை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதில் அமெரிக்காவும் இலங்கையும் ஒரு பகிரப்பட்ட அக்கறையினைக் கொண்டுள்ளன. அமெரிக்கர்களும் இலங்கையர்களும் நிபுணத்துவங்களைப் பகிர்ந்து, ஒருவரிடமிருந்தொருவர் கற்றுக்கொண்டு, ஒன்றிணைந்து பயிற்சி செய்யும் அட்லஸ் ஏஞ்சல் பயிற்சியானது, நடைமுறையில் எமது பங்காண்மை எவ்வாறுள்ளது என்பதற்கான ஒரு வலுவான உதாரணமாகும். மொன்டானா தேசிய காவற்படை மற்றும் எமது பரந்த பாதுகாப்புப் பங்காண்மை ஆகியவற்றினூடாக, எமக்கிடையே காணப்படும் பலவருடகால ஒத்துழைப்பினை மேலும் அதிகரித்து, அமெரிக்க குடிமக்களையும், எமது பங்காளர்களையும், உயிர்களையும் மற்றும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கு உதவி செய்யும் மற்றும் அதிக பாதுகாப்பான மற்றும் மீண்டெழும் தன்மையுடைய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்குப் பங்களிப்புச் செய்யும் ஒரு தயார்நிலையினை நாம் பலப்படுத்துகிறோம்” என அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தெரிவித்தார்.
“இயற்கையனர்த்தங்களுக்கு எல்லைகள் கிடையாது. அவை பொருளாதார வலிமையை அங்கீகரிப்பதில்லை; அவை எம்மைத் தாக்கி, எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் பாதிக்கின்றன. மக்கள் எங்கிருந்தாலும், அனைவரும் ஒன்றுபட்டு அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதைக் கற்றுக்கொள்வதற்காகப் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், மனிதாபிமான உதவி மற்றும் பேரனர்த்த நிவாரண நடவடிக்கைகள் என்றால் என்னவென்பதன் அர்த்தத்தை, அட்லஸ் ஏஞ்சல் II பயிற்சியினூடாக நாங்கள் உண்மையிலேயே மறுவரையறை செய்துள்ளோம்” என இலங்கை விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் பண்டு எதிரிசிங்க கூறினார்.
அவசரநிலைகள் ஏற்படுவதற்கு முன்பு ஒன்றாகப் பயிற்சி செய்வதானது, நிஜ உலக நெருக்கடிகளின் போது தொடர்பாடல்களையும், ஒருங்கிணைப்பினையும் மேற்கொள்வதற்குமான மற்றும் வினைத்திறனுடன் செயற்படுவதற்கான அமெரிக்க மற்றும் இலங்கைப் படைகளின் திறனைப் பலப்படுத்துகிறது. 2025 டிசம்பரில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியின்போது அவ்வொத்துழைப்பின் பெறுமதி வெளிப்பட்டது. அப்போது, பொருட்களை விநியோகிப்பதற்காக அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J Super Hercules விமானங்களைப் பயன்படுத்தியது உட்பட, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய ஏற்பாட்டியல் உதவிகளை வழங்குவதற்காக அமெரிக்க மற்றும் இலங்கைப் படைகள் ஒன்றிணைந்து பணியாற்றின. அடுத்த அவசரநிலை ஏற்படும்போது, பணியாளர்கள், நடைமுறைகள் மற்றும் உறவுகள் என்பன ஏற்கனவே சீராக அமைந்திருப்பதை உறுதிசெய்வதற்கு அட்லஸ் ஏஞ்சல் II போன்ற பயிற்சிகள் உதவுகின்றன.
அமெரிக்க போர்த் திணைக்களத்தின் ‘ஸ்டேட் பார்ட்னர்ஷிப் ப்ரோகிராம்’ (State Partnership Program) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொன்டானா தேசிய காவற் படைக்கும் இலங்கைக்குமிடையில் 2021ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட பங்காண்மையின் அடிப்படையில் இப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. பல ஆண்டுகால கூட்டுப் பயிற்சிகள், நிபுணர் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பரம் மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது, பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்புப் பணிகள், விமானப் போக்குவரத்து மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மொன்டானா தேசிய காவற் படை, அமெரிக்க கடலோரக் காவல் படை மாவட்டம் 13 மற்றும் இலங்கை ஆயுதப் படைகள் ஆகியவற்றிற்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் முறைப்படுத்தியது.
இப்பங்காண்மையினூடாக, மொன்டானா தேசிய காவற் படையின் உறுப்பினர்கள் இப்பிராந்தியத்தில் பேரனர்த்தங்களின் போதான பதிலளிப்புப் பணிகள் தொடர்பான இலங்கையின் விரிவான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளும் அதேவேளை, காட்டுத்தீ, வெள்ளம் மற்றும் பிற அவசரநிலைகளின் போது பதிலளிப்புப் பணிகளை மேற்கொள்வதில் தமக்கிருக்கும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
இசையினூடாக தொழில்முறை உறவுகளையும், மக்களுக்கிடையிலான உறவுகளையும் பலப்படுத்தும் வகையில், பசிபிக் பிராந்திய அமெரிக்க விமானப் படைகளின் இசைக்குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், தமது இலங்கை எதிரிணை சகாக்களுடன் இணைந்து பணியாற்றி இசை நிகழ்ச்சியையும் நடத்துவார்கள்.
மொன்டானா தேசிய காவற்படையைப் பற்றி:
மொன்டானா தேசிய காவற்படையானது, முதன்மையாக குடிமக்கள்-படைவீரர்கள் மற்றும் விமானப்படை வீரர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் தமது சிவிலியன் தொழிற்பணிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் அதேவேளை, தமது சமூகங்களுக்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்கின்றனர்.
இதன் பணியாளர்கள் தேசியப் பாதுகாப்பு முதல் அவசரகால மீட்புப் பணிகள் வரையிலான செயற்பணிகளில் உதவி செய்கின்றனர். அமெரிக்க போர்த் திணைக்களத்தின் ‘ஸ்டேட் பார்ட்னர்ஷிப் ப்ரோகிராம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில்முறை உறவுகள், ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறன், பேரனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் பேரனர்த்தங்களின் போது பதிலளிப்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன்கள் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்காக, மொன்டானா தேசிய காவற்படையானது தனது இலங்கை எதிரிணை சகாக்களுடன் இணைந்து பணியாற்றுகிறது.

