ஹார்முஸ் நீரிணை ஈரானிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, ஈரானின் இராணுவத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்தப…

ஹார்முஸ் நீரிணை ஈரானிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, ஈரானின் இராணுவத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இந்தப் போரில், ஹார்முஸ் நீரிணை மீதான உரிமை யாருக்கானது என இருதரப்புக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரானிய அரசு கட்டுப்படுத்தி வரும் நிலையில், போரால் அந்தப் பாதையை ஈரானிய படைகள் முற்றிலுமாக முடக்கியுள்ளன. இதனால், அப்பகுதியில் அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதில், ஹார்முஸ் நீரிணையை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க   ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த புதன்கிழமை அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில்,

“ஹார்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அதை நாம் தொடர்ந்து தக்கவைப்போம் என நான் கருதுகிறேன். எங்களின் கடற்படை முற்றுகையை அனைவரும் வால் ஆஃப் ஸ்டீஸ் என அழைக்கின்றனர். இதில், ஈரானால் எதுவும் செய்ய முடியாது.” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் பெருமிதங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் ஹார்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டை உறுதி செய்து வருகின்றனர்.

இதுபற்றி, ஈரானின் புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய துணை இராணுவப் படையின் தளபதி ஹுசைன் தயீப் நேற்று கூறுகையில்,

“இன்று, ஹார்முஸ் நீரிணை ஈரானின் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதையும், நமது நாடு முழுமையான பாதுகாப்போடு தனது பாதையில் தொடர்ந்து பயணிப்பதையும் நீங்கள் காணலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் போரில், ஈரானின் முக்கிய தலைவராக அறியப்படும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, உளவுத்துறையின் தோல்வியால் ஹார்முஸ்  நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தவறான கணக்கீடுகளைச் செய்து வருவதாகக் கூறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது. (a)