மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரைக் கைது செய்வதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று பாரிய கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ம…

மலேசியாவில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழுத் தலைவருமான 'கஞ்சிபானி இம்ரான்' என்பவரைக் கைது செய்வதற்காக, உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் ரோஹான் ஓலுகல தலைமையில் விசேட பொலிஸ் குழுவொன்று பாரிய கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. மலேசிய பொலிஸாரால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரான் ஒளிந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் பல இடங்களை இலக்கு வைத்து அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கஞ்சிபானி இம்ரான் மலேசியாவிலிருந்து தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், சர்வதேச பொலிஸாருடன் இணைந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல்வழிப் பாதைகளில் மலேசிய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மலேசியாவில் அவருக்கு உள்ள தொடர்புகள் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது மலேசிய பொலிஸாரின் காவலில் உள்ள கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளியான 'ரத்மலானே சீமா' உட்பட மூன்று குற்றவாளிகளிடம் பொலிஸ் உதவி ஆணையர் ரோஹான் ஓலுகல மற்றும் மலேசிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது பின்னணி குறித்த பல முக்கிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இந்த பாதாள உலகக் குழுத் தலைவரைக் கைது செய்யும் புலனாய்வு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர். பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரும் இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்களித்து வருகின்றனர். கஞ்சிபானி இம்ரானின் பிரதான சகாவான ரத்மலானே சீமா மலேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கஞ்சிபானி இம்ரான் தனது மறைவிடத்தை மாற்றி வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எப்படியாவது இந்த பாதாள உலகக் தலைவரைக் கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக முன்னேற்றங்களை ஆய்வு செய்து தேவையான வழிகாட்டல்களை வழங்கி வருகின்றனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.