கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகுதி, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பரேவி சுதா’வினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட…
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட 472 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் தொகுதி, டுபாயிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ‘பரேவி சுதா’வினால் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் கடத்தலுடன் ‘அங்கொட பிரியந்த’ மற்றும் ‘ரூபன்’ என அழைக்கப்படும் நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருள் அடங்கியிருந்த கொள்கலன் மொரோக்கோவுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், உண்மையில் குறித்த போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டுவருவதற்கே திட்டமிடப்பட்டிருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெளிநாட்டில் வசிக்கும் தனியார் தகவல் வழங்குநர் ஒருவரிடமிருந்து, ஐஸ் போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில் இருப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த கொள்கலனை சோதனையிடுவதற்காக பொலிஸார் கடந்த 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். அதற்கமைய, நேற்று (31) கொள்கலன் சோதனையிடப்பட்டபோது, துணிகளுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 472 கிலோகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த போதைப்பொருள் தொகுதி இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் பெயரில் அனுப்பப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஆறுமுகன் சசிதரன் என்ற வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு பாகிஸ்தான் பிரஜைகள் தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இதையடுத்து, ஜம்பட்டா வீதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த இரு பாகிஸ்தான் பிரஜைகளையும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தெமட்டகொடை வர்த்தகரின் நிறுவனத்தின் ஊடாக குறித்த போதைப்பொருள் தொகுதியை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட இரு பாகிஸ்தான் பிரஜைகளும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

