மதுப் பாவனையை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் நிலை மிகவும் மோசமாகவும், அவர்களின் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் விமோசனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெ…
மதுப் பாவனையை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் நிலை மிகவும் மோசமாகவும், அவர்களின் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் விமோசனா இல்லத்தின் பணிப்பாளர் திருமதி செல்விகா சகாதேவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், விமோசனா இல்லத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு நடவடிக்கைகளில் பலர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போது வாடகை இடத்தில் இயங்கி வரும் விமோசனா இல்லத்திற்கு அரசாங்கத்தால் ஒரு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் புதிய கட்டிடமொன்றை அமைத்து சேவைகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது பயன்படுத்தப்படும் வாடகை கட்டிடம் உரிமையாளர்களுக்குத் தேவைப்படுவதால், வேறு இடத்திற்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக வாடகை இடங்களைத் தேடுவது சிரமமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணியில் புதிய கட்டிடமொன்றை அமைக்க அரசாங்கமும் நலன்விரும்பிகளும் தனவந்தர்களும் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தற்போது ஆண்களுக்கு மாத்திரமே புனர்வாழ்வு சேவை வழங்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் பெண்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம் எனத் தெரிவித்த அவர், 18 வயதிற்குட்பட்ட போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் மட்டக்களப்பில் இல்லை எனக் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு மற்றும் நன்னடத்தைத் திணைக்களத்தினால் பல சந்தர்ப்பங்களில் சிறுவர்களை புனர்வாழ்வுக்காக தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும், இதுவரை பல சிறுவர்களை புனர்வாழ்வளித்து சமூகத்திற்கு மீள அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களிடம் 13 வயது சிறுவன் உட்பட 24 வயதிற்குட்பட்ட பலர் புனர்வாழ்வுக்காக வந்துள்ளதாகவும், சிறுவர்களுக்கென தனியான முறையான புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் அவசியம் எனவும் செல்விகா சகாதேவன் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பில் சிறுவர்களுக்கான விசேட போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையமொன்று அமைக்கப்பட்டால் கிழக்கு மாகாணத்தில் பல குடும்பங்களுக்கு அது பெரும் உதவியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

