மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியில் நேற்று (31) நடைபெற்ற ஊடக…

மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்படும் ‘அம்மை அப்பன் இல்லம்’ கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 9,400 மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கான பாதுகாப்பான தங்குமிடமாக இந்த இல்லம் உருவாக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

24 அறைகள், ஒவ்வொரு அறைக்கும் தனித்தனி குளியலறைகள், மைய மண்டபம், மருத்துவ அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும், மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த இல்லம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரே நேரத்தில் 50 மாற்றுத்திறனாளிகள் தங்கக்கூடிய வகையில் இந்த இல்லம் அமைக்கப்படுவதுடன், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.

அனைத்து அரச திணைக்களங்களின் அனுமதிகளும் பெறப்பட்டுள்ளதுடன், திறந்த டெண்டர் நடைமுறையின் மூலம் ஒப்பந்தக்காரர்கள் தெரிவுசெய்யப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் பொதுமக்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இல்லத்தின் முதல் கட்டப் பணிகளை அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவு செய்து, 2028ஆம் ஆண்டு தை மாதத்தில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 2016ஆம் ஆண்டு முதல் தமிழ் பரா ஸ்போர்ட்ஸ் மற்றும் டேட்டா சாரிட்டி அமைப்புகள் இணைந்து வடக்கு, கிழக்கு மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்தார்.