கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்பட்டுப் பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சராக இருந்து, முப்…

கடந்த காலங்களைப் போல் இல்லாமல் தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்பட்டுப் பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சராக இருந்து, முப்படைகளுக்கும் இராணுவத்தினருக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று எதுவுமே அறியாதவர் போல அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும் கோமாளிபோன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்து நாங்கள் நேரடியாக விமர்சனங்களைச் சொல்ல முடியாது. இருப்பினும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இன்னும் பலர் குற்றவாளிகளாகவோ அல்லது பொறுப்புக்கூற வேண்டியவர்களாகவோ இருக்கிறார்கள்.

அன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்து, முப்படைகளுக்கும் இராணுவத்தினருக்கும் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று எதுவுமே அறியாதவர் போல அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாடல்களைப் பாடிக்கொண்டும் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அதேபோன்று, அன்றைய காலகட்டத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் மூலம் பயனடைந்ததாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் கோட்டாபய ராஜபக்ஷ போன்றோர் சுதந்திரமாக இருக்கும் நிலையில், தற்போது பிள்ளையான் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போன்றோர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் வெளிவந்த பின்னரே, ஈஸ்டர் தாக்குதல் குறித்த முழுமையான பின்னணியைப் புரிந்துகொள்ள முடியும். எனினும், கடந்த காலங்களைப் போலன்றி, தற்போது பதவி நிலைகளைப் பாராமல் நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்பட்டுப் பல தீர்ப்புகளை வழங்கி வருவது வரவேற்புக்குரியது. நீதிமன்றங்கள் தொடர்ந்து சுயாதீனமாகத் தீர்ப்புகளை வழங்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டம் சம்பந்தப்பட்ட ஒரு சில விடயங்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திலே அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்திலே மிகத் தெளிவாக வெளியே வந்த ஒரு விடயம் தான் என்னவென்று சொன்னால், இன்று இந்த மாவட்டத்திலே நிர்வாகத்தை நடத்துவது யார் என்பது தெரியாத ஒரு நிலை வந்திருக்கின்றது.

தென்னிலங்கைச் சேர்ந்த, மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் இந்த மாவட்டத்திற்கு ஒரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை வருகை தந்து போவார். நேற்றைய தினம் அடுத்த கூட்டம் ஒன்பதாம் மாதம் ஏதோ ஒரு திகதியில் குறித்து அவர் சென்றுவிட்டார். இனி அவர் இரண்டு மாதங்களுக்கு வரும் வரைக்கும் இந்த மாவட்டத்திலே இருக்கிற முக்கிய பிரச்சினைகள், அதிகாரிகளை வழிநடத்துவது, அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் கொடுப்பது, ஆலோசனை வழங்குவது போன்ற விடயங்கள் யார் செய்வது என்பது தெரியாத ஒரு நிலை இருக்கின்றது.

நண்பர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களிடம் சில பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவராவது சில விடயங்களைச் செய்திருக்கலாம். ஆனால் இன்று சூழலைப் பார்க்கும்போது அவருக்கே தெரியாமல் சில விடயங்கள் நடக்கிறது. ஒரு உதாரணம் ஒன்று மாத்திரம் சொல்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் என்ற பெயரிலே பல அமைச்சர்கள் கடந்த ஒரு ஆண்டுக்குள்ளே வந்திருந்தார்கள். அதிலே போக்குவரத்து அமைச்சர் வந்திருந்தார், பொலிஸ் பாதுகாப்பு அமைச்சர் வருகை தந்திருந்தார், வன விலங்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் வந்திருந்தார்கள், மீன்பிடித்துறை அமைச்சர் வந்திருந்தார்.

இதிலே குறிப்பாக மீன்பிடித்துறை அமைச்சர் வந்தபொழுது மட்டக்களப்பில் கழுவங்கேணிப் பிரதேசத்திலே, அந்த மீன்பிடி அமைச்சுக்குச் சொந்தமான நிலையத்திலே ஒரு புதிய ஐஸ் ஃபேக்டரி அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தியினுடைய ஏதோ ஒரு அமைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒருவர், ‘பிரஜா சக்தி’ என்ற பெயரிலே அந்த கிராமத்தில் இருக்கிற ஒரு சிலரைச் சந்தித்து அந்த 25 மில்லியன் ரூபாய் திட்டத்தை மாற்றியிருக்கின்றார். இது சம்பந்தமாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சுனில் ஹந்துன்னெத்திக்குத் தெரியாது, பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபுவுக்குத் தெரியாது, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கும் தெரியாது.

இப்படித் திட்டங்களை மாற்றி அமைக்கும் சூழலில் எதுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் நடத்த வேண்டும்? எதுக்கு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்? இந்த மாவட்டத்தில் பொறுப்பான ஒருவர் இல்லை என்றால், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாக வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.