முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று தீர்ப்பளித்துள்ளார். தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்' நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் ப…
முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இன்று தீர்ப்பளித்துள்ளார். தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்' நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 7 ஆண்டுகள் வீதம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தண்டனையை ஏககாலத்தில் (ஒரே நேரத்தில்) அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் மேலதிகமாக 6 மாதங்கள் வீதம் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்தார். 2014ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்குச் சொந்தமான 330,000 ரூபா பணத்தை மாறவில பகுதியிலுள்ள 'கம்பட கேட்டரர்ஸ்' எனும் தனியார் நிறுவனத்திற்குச் செலுத்துமாறு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் எதிர்த்தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ, தனது கட்சிக்காரர் மற்றும் அவரது மனைவி நோயுற்றிருப்பதாகவும், பிள்ளைகள் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவித்து தண்டனையைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், லஞ்ச ஊழல் சட்டத்தின்கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து மேல் நீதிமன்ற நீதிபதியினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

