உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது கவலையை வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை (03) வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறையின் சுதந்திரத்…

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது கவலையை வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை (03) வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஜனநாயக ஆட்சியின் அடிப்படை அம்சம் என வலியுறுத்தியுள்ள அந்த அமைப்பு, முன்மொழியப்பட்டுள்ள சட்டவரைவை தற்போதைய வடிவிலேயே கவனமாக மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் கட்டாய ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பைத் திருத்த அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து இலங்கை நீதிச் சேவைச் சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்புகள் வெளியிட்டுள்ள கவலைகளுடன் தாமும் இணங்குவதாக IAJ தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காலமும் நடைமுறையும், அதற்குப் பின்னால் உள்ளதாகக் கருதப்படும் நோக்கமும் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்தகைய முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்கள் அவசரமாக அல்லாது, விரிவான கலந்தாலோசனை, கொள்கை ரீதியான ஆய்வு மற்றும் வெளிப்படையான நடைமுறையின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் IAJ வலியுறுத்தியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட நபர் அல்லது சில நீதித்துறை அதிகாரிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடையே எண்ணம் உருவாகும் பட்சத்தில், அது நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான நம்பிக்கையை பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

இலங்கையின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச நீதிபதிகள் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.