தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் கொலை வழக்கு விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால…
தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் கொலை வழக்கு விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வழக்கின் பிரதான சந்தேகநபருக்கும் அவரது மனைவிக்கும் தலைமறைவாக இருக்க உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி மற்றும் மற்றொரு சந்தேகநபரை 48 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நுவரெலியா நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் சடலம் மீட்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த பெண்ணின் காதலர் எனக் கூறப்படும் பிரதான சந்தேகநபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார். வெள்ளவத்தையிலிருந்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பேருந்தில் மாறு வேடத்தில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், யாழ்ப்பாணம் வழியாக கடல் மார்க்கத்தில் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். The post பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்! appeared first on Battinaatham.

