போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று (01) காலை நடைபெற்ற, சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகளின்போது உடனடியாக செயற்படு…
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் இன்று (01) காலை நடைபெற்ற, சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகளின்போது உடனடியாக செயற்படுவதற்கும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்குமான ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் கடந்த காலங்களில் பாரிய பிரச்சினையாக காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு தேவையான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் இரவு 10 மணி வரை பணியாற்றி அறிக்கைகளை விரைவாக வெளியிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 9,081 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தற்போது நிலுவையில் உள்ள அனைத்து அறிக்கைகளையும் வெளியிடுவதே இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இதற்கு முன்னர் எந்தவொரு அரசாங்கத்தின் காலத்திலும் கைப்பற்றப்படாத அளவிலான போதைப்பொருட்கள் தற்போதைய அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு வருவதாகக் கூறினார்.
அதேவேளை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் அல்லர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், சிலர் சந்தர்ப்பவசமாக செய்த தவறுகளின் காரணமாக சிறையில் இருப்பதால், அவர்களுக்கு சமூகத்தில் மீண்டும் நல்ல வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அவசர நிலைமைகளின்போது பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலைமைகள் மீண்டும் ஏற்படும்போது அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காக வலுவான ஒருங்கிணைந்த பொறிமுறை அவசியம் எனத் தெரிவித்த அவர், இதுவரை 15 சிறைச்சாலைகளில் இத்தகைய பொறிமுறை நிறுவப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைகளில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னரே அவற்றைக் கண்டறிந்து தீர்வு காணுதல், அவசர நிலைமைகளின்போது பிரதேச மட்டத்தில் ஒருங்கிணைந்து உடனடியாக செயற்படுதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை முறைப்படுத்துதல் ஆகியவை இந்தப் பொறிமுறையின் முக்கிய நோக்கங்களாகும்.
இதனிடையே, அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின்போது கைதிகளால் தீவைக்கப்பட்ட பிரதான ஜெயிலர் அலுவலகம், புனர்வாழ்வுப் பிரிவு, பின்னல் பிரிவு மற்றும் நெசவுப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளையும் அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்த அமைச்சர், கடந்த மாதத்தில் மாத்திரம் மஹர சிறைச்சாலைக்குச் சொந்தமான 500 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறைச்சாலையிலிருந்து விடுதலையான பின்னர் மீண்டும் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாமல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக வாழுமாறு கைதிகளிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
எனினும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கப்படாது என மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், சிறையில் உள்ளவர்கள் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய மனிதவளமாக உருவாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

