உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து செயற்படும் எதிர்க்கட்சிகள், “சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல” நடந்துகொள்வதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட…

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து செயற்படும் எதிர்க்கட்சிகள், “சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல” நடந்துகொள்வதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்று பழைய கச்சேரி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக வரவு–செலவுத் திட்டத்தின் மூலம் 10,400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் உட்கட்டமைப்பு, பாலங்கள், வீதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மயிலத்தமடு–மாதவனை காணி விவகாரம் தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட 3,000 ஏக்கர் காணியை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கிரான்–பொண்டுகள்சேனை பாலம், மண்டூர் பாலம், பழுகாமம் மற்றும் வெல்லாவெளி பகுதிகளுக்கான பாலங்கள், வீதிகள், வாகனேரி குளத்தின் கொள்ளளவை அதிகரித்தல், யானை–மனித மோதலைக் குறைக்கும் பாதுகாப்பு வேலிகள் மற்றும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது வரம்பை அதிகரிக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஒன்றிணைய மாட்டோம் என்று கூறிய எதிர்க்கட்சிகள் இன்று ஒன்றிணைந்து மக்களை குழப்ப முயற்சிக்கின்றன. தங்களது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளில் இருந்து தப்பிக்கவே இவ்வாறான எதிர்ப்புகளை முன்வைக்கின்றனர்” என்றார்.

நீண்டகால நீதிமன்ற வழக்குகளில் நீதிபதிகள் மாற்றப்படுவதால் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், அதனால் நீதித்துறை தாமதமடைவதாகவும் குறிப்பிட்ட அவர், நீதித்துறையை வலுப்படுத்தி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்து நீதியை உறுதிப்படுத்துவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.