மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை செவ்வாய்கிழமை (01) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 18…
மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஆடொன்றைப் பிடித்து வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபரொருவரை செவ்வாய்கிழமை (01) பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த 5 ஆடுகளில் ஒன்றை, சிறிய ரக வேனில் வந்த நபரொருவர் பிடித்து ஏற்றிச் சென்றுள்ளார்.மேலதிக விசாரணை இது குறித்து ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, சிசிரிவி காணொளிகளின் உதவியுடன் ஆடு கடத்தப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமை (01) காத்தான்குடி பகுதியில் வைத்துச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வேனும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக வாகனங்களைப் பயன்படுத்தி ஆடு, மாடுகளைத் திருடிச் செல்லும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

