வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அ…
வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாகக் காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றைய தினம் (25) அவ்அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.TIN சான்றிதழ் மேற்படி கலந்துரையாடியதற்கு அமைவாகப் பின்வரும் விபரங்களைப் பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் தெரியப்படுத்தியுள்ளார். இதனடிப்படையில், “வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தினைப் பெற்றுக்கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அவ்வாறு கட்டணம் செலுத்துவதோ அல்லது பெற்றுக்கொள்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் உரியவர் தனது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும். வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ (அதாவது www.ird.gov.lk) அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிய முடியும். எனவே மேற்படி விபரங்களுக்கு அமையப் பொதுமக்கள் எதுவித பீதியும் அடையத் தேவையில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

