கனகராஜா சரவணன் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த சிறைக்கைதியின் சகோதரர் மற்றும் அவரது ந…

கனகராஜா சரவணன்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த தெமட்டகொடையைச் சேர்ந்த சிறைக்கைதியின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும், 'ஐஸ்' மற்றும் 'ஹெரோயின்' போதைப்பொருட்களுடன்   புதன்கிழமை (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

கடந்த ஏப்ரல் 7ஆம் திகதியன்று, 7 அரை கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி, நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட படுகொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்த குறித்த போதைப்பொருள் வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இதனையடுத்து, சிறையிலுள்ள தனது சகோதரனைப் பார்வையிடுவதற்காக அவனது தம்பியும் அவரது நண்பனும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்குச் சென்று, கல்லடிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதன்போது, மட்டக்களப்பு தலைமையகக் காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், சம்பவ தினமான புதன்கிழமை இரவு குறித்த விடுதியை முற்றுகையிட்டுச் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, அங்குள்ளறையில் தங்கியிருந்த தெமட்டகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரிடமிருந்தும் 100 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் வியாபாரியின் சகோதரர், ஏற்கனவே போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர், நீதிமன்றப் பிணையில் அண்மையில் வெளிவந்தவர் ஆவார். மேலும், இவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.