கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி என்றும், முதலில் கருணாவுடன் இருந்ததுடன் பின்னர் ரணிலுடன் இருந்தவர் என்றும் குற்றம்சாட்டிய சுயேச்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன், தான் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்ற…

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி என்றும், முதலில் கருணாவுடன் இருந்ததுடன் பின்னர் ரணிலுடன் இருந்தவர் என்றும் குற்றம்சாட்டிய சுயேச்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான அர்ச்சுனா இராமநாதன், தான் வடக்கு மாகாண சபையைப் பொறுப்பேற்றவுடன் முஸ்லிம் மக்களுக்காகக் குடியேற்ற ஒதுக்கப்பட்ட பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளை அபிவிருத்தி செய்வதே தனது முதல் பணி என்றும் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில்   புதன்கிழமை (19) அன்றுஇடம்பெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தைக் கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், "கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைத் தொடர்பில் இங்கு பேச வேண்டியுள்ளது. 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடைப் பிரச்சினை முடிந்துவிட்டது என ஆதம்பாவா எம்.பி.யும் சுகாதார அமைச்சருடன் பேசிய முஸ்லிம் எம்.பி.க்களும் கூறியிருந்தனர். ஆனால், அந்தப் பிரச்சினை இன்றுவரை முடியவில்லை.

ஓர் இனத்தை இன்னோர் இனம் அடக்கினால், அந்த அடக்கும் இனத்திலிருந்து ஒருவன் அதற்கு எதிராகக் கதைக்கத்விட்டால், இந்த நாட்டிலிருந்து இனவாதத்தை ஒழிக்க முடியாது. அந்தவகையில், எனது இறுதி வாரப் பாராளுமன்ற அமர்வில் எனது சகோதர இனத்துக்காக நான் கதைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் மிக மோசமான இனவாதி என நான் ஆரம்பம் முதலே கூறிவருகின்றேன். முதலில் கருணாவுடன் இருந்ததுடன் பின்னர் ரணிலுடன் இருந்தவர்; இப்போதும் அவர் அரசியல் செய்கின்றார். இந்த அரசாங்கம் முதுகெலும்பு இல்லாத அரசாங்கமாக இருக்கின்றது. எல்லை நிர்ணய குழுவில் ஒரு முஸ்லிம் இல்லை - வெட்கம். அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் இல்லை - வெட்கத்தின்மேல் வெட்கம். கடவுளின் புண்ணியத்தால் பிரதி சபாநாயகராக ஒரு முஸ்லிம் உள்ளார். அவருடன் எதிர்க்கட்சியினர் நெருக்கம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் அவர் தூக்கப்படலாம்.

என்னுடைய இனத்திற்கு எந்தவொரு முஸ்லிம் நபராவது ஒருகாலத்தில் உதவி செய்திருந்தால், எனது பாராளுமன்றக் கடைசித் நாட்களில் செஞ்சோற்றுக் கடனை செய்துவிட்டுப் போகவே இந்தச் சில நிமிடங்களைப் பயன்படுத்துகின்றேன். 1995 இல் தமிழ் பெண்கள் பொட்டுடன் ரூபவாஹினியில் செய்தி வாசிக்க முடியாது என சந்திரிகா அரசு சட்டம் கொண்டுவந்தது. அப்போது அமைச்சராக இருந்த எம். எச். எம். அஷ்ரப் அதற்கு எதிராகப் போராடினார். என்னுடைய இனத்திலிருந்து உங்களுடைய இனத்திற்கு கல்லெறியப்படுமாக இருந்தால், அந்தக்கற்களை எங்களுடைய இதயம் தாங்கிக்கொள்ளும். இதேநேரம், நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாத காலத்தில் உங்களுடைய இன அடிப்படைவாதிகள் யாராவது எங்களுடைய இனத்தை நோக்கி இனவாதக் கருத்துக்களைக் கூறினால், உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கதைப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

வடக்கில் பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகள் தான் சுகாதாரத்தில் மிக மோசமாகச் சீரழிந்த நிலையில் இருக்கும் பகுதிகள். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற இந்தப் பகுதிகளைத்தான் தெரிவு செய்தனர். நான் வடக்கு மாகாண சபையை எப்போது பொறுப்பேற்கின்றேனோ, ஒரு தமிழனாகச் சொல்கின்றேன்; முதல் முதலில் அபிவிருத்தி செய்வது பொம்மைவெளி, காக்கைத்தீவு பகுதிகளைத்தான். மழை பெய்தவுடன் டயஸ்போறாவிடம் காசு வாங்கி முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கின்றோம் என்று சாரத்தைத் தூக்கிக்கட்டிக்கொண்டு போய் நிற்பார்கள்.

என்னுடைய நகமும் சதையுமான முஸ்லிம் மக்களுக்காக நாளை (இன்று) ஒரு சிறப்புப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டுவருகின்றேன். கிழக்கிலிருந்து ஈரோஸைச் சேர்ந்த ஒருவர் என்னைப்பற்றி ஏதோ கூறியுள்ளார்; அவர் பெயர்கூட எனக்குத் தெரியாது. கிழக்கில் விடுதலைப் புலிகளினால் கொலைகள் நடந்தது என்றால், ஈரோஸ் மாதிரியான இந்தக் கட்டமைப்புகள்தான் முஸ்லிம் மக்களை வெட்டிக்கொன்றது. அது எமது தேசியத் தலைவர் பிரபாகரனின் கையில் போய் விழுந்தது. அதேபோன்று, முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்த கொலைகள்தான் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தமிழ் மக்களையும் இன்றுவரை பிரித்து வைத்துள்ளது.

இங்குள்ள அரச தரப்பு முஸ்லிம் எம்.பி.க்கள் பாவம்; அவர்களுக்கு வாயும் இல்லை. வேறு இடங்களில் இருக்க வேண்டியவைகளும் இல்லை. எல்லாவற்றையும் மூடிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களினால் கதைக்க முடியாது. சிற்றுண்டிச்சாலையில் அவர்கள் வந்திருந்து கதைக்கும்போதுதான் எங்களுக்கு விளங்கும்; அவர்கள் சொல்லித்தான் நான் இங்கு கதைக்கின்றேன்" என்றார்.