இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் 'தினன தகுண' அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கும், அரசியல் விமர்சனங்களை முடக்குவதற்கும் ஊழலுக்கு எதிரான அலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்த அம…

இலங்கையின் ஜனநாயகக் கட்டமைப்பு வேகமாக வீழ்ச்சியடைந்து வருவது தொடர்பில் 'தினன தகுண' அமைப்பு தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.அரசாங்கம் தனது பொருளாதாரத் தோல்விகளை மறைப்பதற்கும், அரசியல் விமர்சனங்களை முடக்குவதற்கும் ஊழலுக்கு எதிரான அலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருவதாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய முற்பட்டமை இதற்குச் சிறந்த அண்மைய உதாரணமாக கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிமைசார் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பிருந்தும், அரசாங்கத்தின் ஏவலாளராகச் செயற்பட்டு காவல்துறையினர் அவரை குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்க முயன்றுள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அநுரகுமார திசாநாயக்க ஆட்சி பீடமேறி 18 மாதங்கள் நிறைவடையும் நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகள் முற்றாகப் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அந்த 0வமைப்பு, உண்மையான வருமான வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு மற்றும் மறைமுக வரிகளால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு போன்றவற்றை அரசியல் எதிரிகளைப் பயமுறுத்தும் கருவிகளாக அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும், இது ஜனநாயகத்தை காவல்துறை ராஜ்யத்தை நோக்கித் தள்ளும் ஆபத்தான நடவடிக்கை என்றும் 'தினன தகுண' அமைப்பு எச்சரித்துள்ளது.

எனவே, அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் பயணத்துக்கு எதிராகக் குரலெழுப்புமாறும், நூற்றாண்டு காலமாகப் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முன்வருமாறும் 'தினன தகுண' அமைப்பு ஊடகவியலாளர்களிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.