இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GovPay மூலம் உடனடியாக செலுத்தும் வசதி நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் W. P. J. சேனாதீர தெரிவித்துள்ளார். போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடு…

இலங்கையில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GovPay மூலம் உடனடியாக செலுத்தும் வசதி நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் W. P. J. சேனாதீர தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளுக்கு GovPay மூலம் அபராதங்களைப் பெற்றுக்கொள்வதற்கான போதுமான கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கடமையில் ஈடுபடும் போது அவற்றைத் தம்முடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், போக்குவரத்து விதிமீறலுக்காக அபராதம் விதிக்கப்படும் சாரதிகள், இயன்ற சந்தர்ப்பங்களில் சம்பவ இடத்திலேயே GovPay ஊடாக கட்டணத்தைச் செலுத்தி தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.

GovPay வசதி இல்லை எனக் கூறி சாரதிகளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் முன்னதாக எச்சரித்துள்ளனர்.

2026 பெப்ரவரி மாதத்துக்குள் GovPay போக்குவரத்து அபராதச் செலுத்தும் முறைமை நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதாக ICTA தெரிவித்துள்ளது. தற்போது 678 பொலிஸ் நிலையங்களில் இந்த முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், 4,100-க்கும் அதிகமான கையடக்க சாதனங்கள் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக GovPay தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், எதிர்காலத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு குறைப்புப் புள்ளி (Demerit Points) முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் சேனாதீர தெரிவித்துள்ளார். விதிமீறலின் தன்மைக்கு ஏற்ப சாரதிகளின் புள்ளிகள் குறைக்கப்படும் என்றும், முறைமை நடைமுறைக்கு வந்த பின்னர் ஒவ்வொரு விதிமீறலுக்கும் வழங்கப்படும் புள்ளிகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GovPay வசதியை மறுக்கும் அல்லது சாரதிகளுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் சாரதிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.