ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதி உடன்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், நீரிணையை மீண்டும் திறப்பதற்கு முன் அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கத் தாக்குதல…
ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமானுடன் இறுதி உடன்பாட்டை எட்டத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், நீரிணையை மீண்டும் திறப்பதற்கு முன் அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், ஈரானுக்கு எதிரான தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் ஆகியவை முக்கிய நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் ஹோர்முஸ் நீரிணை வழியான கடற்போக்குவரத்தை மூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமானுடன் புதிய கடற்பாதை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டாலும், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நீரிணை முழுமையாக திறக்கப்படாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூன் மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளதாகக் கூறிய அவர், இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறாது என்றும், மத்தியஸ்தர்கள் ஊடாகவே தகவல்கள் பரிமாறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஈரானில் நேரடியாக தலையிடுவதில் அவசரம் காட்டவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகள்
அமெரிக்கத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல்.
ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும், ஈரான் ஆதரவு அமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும் நிறுத்துதல்.
பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகளை நிறுத்துதல்.
ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்குதல்.
முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல்.












