டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய லலித் கண்ணங்கரா எனப்படும் ‘பஸ் லலியா’ தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கொலைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில்…

டுபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய லலித் கண்ணங்கரா எனப்படும் ‘பஸ் லலியா’ தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் கொலைத் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் ஹங்வெல்ல, மீகொட, ஹோமாகம, அவிசாவளை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், அப்பகுதிகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்களை அச்சுறுத்தியதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபரின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி, பல தொழிலதிபர்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வேறு பகுதிகளுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவருக்கு பணம் வழங்க மறுத்ததாகக் கூறப்படும் தொழிலதிபர்கள் மற்றும் அவருக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் உள்ளிட்ட சுமார் 15 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லலித் கண்ணங்கரா வேலையின்றி இருந்த காலத்தில் அவருக்கு பேருந்து நடத்துநர் பணியை வழங்கியதுடன், பணம் செலுத்தாத ஒருவரை தனது வீட்டில் தங்க வைத்த நபர் ஒருவரையும் அவர் சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ள லலித் கண்ணங்கராவை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் வழிகாட்டலில் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கமல் அரியவன்ச தலைமையிலான குழுவொன்று டுபாய் சென்றுள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (25) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் மேலும் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கைது

லலித் கண்ணங்கராவைத் தவிர, ‘கொண்ட ரஞ்சி’, ‘அல்டோ தர்மே’ மற்றும் ‘வனாத்தே சத்து’ என அழைக்கப்படும் மேலும் சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களும் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரை கொலை செய்ய முயன்றதாக ‘கொண்ட ரஞ்சி’ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் ‘அல்டோ தர்மே’ தொடர்புபட்டுள்ளதாகவும், வனாத்தே பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் ‘வனாத்தே சத்து’ தொடர்புடையவர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.