திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்படவுள்ளது.இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலங்கையின் கடல் சூழலியல் அமைப்புகள் தொடர்பில்…

திருகோணமலை, நிலாவெளியில் அமைக்கப்பட்டுவரும் பவளப் பாதுகாப்பு மையம் மற்றும் ஆய்வுகூடம், எதிர்காலத்தில் பவள அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தப்படவுள்ளது.இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இலங்கையின் கடல் சூழலியல் அமைப்புகள் தொடர்பில் கற்றறிந்து, ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த மையத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின்னர், பவளப் பாதுகாப்பு மற்றும் மீளுருவாக்க நடவடிக்கைகளுடன், பல்வேறு செயற்பாடுகளையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பவள இனங்கள், கடல் சூழலியல் அமைப்புகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் தொடர்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தளமாகவும், பவளப் பாறைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையமாகவும் இது செயற்படவுள்ளது.

கடல் உயிரினப் பல்வகைமையைப் பாதுகாப்பது, கடல் வளங்களை நிலையான முறையில் நிர்வகிப்பது மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்காக இயற்கைச் சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், நாட்டின் நிலையான சுற்றுச்சூழல் கொள்கையின் கீழ், இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற கடல் உயிரினப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.