ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பரவலாக இது மாறியுள்ளது. கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்…
ஜனநாயகக் கொங்கோ குடியரசில் மிக வேக பரவிவரும் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆக உயர்வடைந்துள்ளது.
இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் பதிவான மிக மோசமான மற்றும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பரவலாக இது மாறியுள்ளது.
கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்பட்ட எபோலா பரவலின் போது 2,299 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போதைய அலையின் தாக்கத்தினால் பலி எண்ணிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் எபோலா தொற்று நாட்டின் தேசிய பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைக்கால அறிக்கையின்படி, இதுவரை 4,945 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 101 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைரஸின் தீவிர பரவல் குறித்து எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவித் திட்ட அதிகாரி டொம் பிளெட்சர், எபோலா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி வெகுவேகமாக பரவி வருவதாகவும், இதனைத் தடுக்க சர்வதேச சமூகத்தின் உடனடி ஒத்துழைப்பும் வேகமான நடவடிக்கைகளும் அவசியமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முறை பரவிவரும் 'புண்டிக்புஜோ' ரக எபோலா வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது உரிய சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்வு
அத்துடன் மோசமான சுகாதார கட்டமைப்பு, நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும் ஆயுத மோதல்கள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை என்ப ன நோய் தடுப்புப் பணிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் மரணிப்போரின் விகிதம் ஆரம்பத்தில் 20 சதவீதமாக இருந்தபோதிலும், தற்போது அது 46 சதவீதமாக கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது நோய்த்தொற்றுக்குள்ளாகும் இருவரில் ஒருவர் உயிரிழக்கும் அபாயகரமான சூழல் நிலவுவதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய பரவல் வேகம் தொடருமானால், உலகளவில் பேரழிவை ஏற்படுத்திய 2014-2016 மேற்கு ஆபிரிக்க எபோலா பரவலையும் இது விஞ்சிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.












