முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செ…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மருத்துவ சிகிச்சை

நவ மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுகீஸ்வர பண்டாரவின் காலில் காணப்பட்ட ‘வெரிகோஸ்’ (Varicose veins) நிலைமை தீவிரமடைந்து, நரம்பு ஒன்று வெடித்ததன் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குத் தேவையான முறையான மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கப்படாவிட்டால், கடுமையான பெக்டீரியா தொற்று ஏற்படக்கூடும் என அவருக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அவரது காலை அகற்ற வேண்டிய நிலை கூட ஏற்படக்கூடும் என சட்டத்தரணிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த உடல்நிலையை கருத்திற்கொண்டு, அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி, சட்டத்தரணிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.சிறைச்சாலை வைத்தியசாலை எனினும், அந்தக் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியின் உள்நிர்வாகம் அல்லது சுகாதார வசதிகள் தொடர்பில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அத்தகைய அதிகாரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கே உரியது என சுட்டிக்காட்டிய நீதவான், குறித்த கோரிக்கையை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் நேரடியாக முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, ஏற்பட்டுள்ள உடல்நிலையை கருத்திற்கொண்டு, சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று (21) பிற்பகல் அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுகீஸ்வர பண்டார, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் விசேட திட்டங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.