மாகாண சபைகளினால் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்த…
மாகாண சபைகளினால் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாகாண மட்டத்தில் தற்போது 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் ஒரே கொள்கையின் கீழ் தமது திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, தேசிய கொள்கைகளின் அடிப்படையில் திட்டங்களை வகுப்பது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், அதற்கமைய மாகாண மட்டத்தில் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திட்டங்கள் இரட்டிப்பாவதைத் தவிர்ப்பதற்காக அரச பொறிமுறையில் தரவுகள் மற்றும் தகவல்கள் முறையாகப் பரிமாறப்படுவதுடன், நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதன்மூலம் தேவையற்ற திட்டங்களுக்கு வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து, மக்களுக்கு அவசியமான திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதியுதவிகளின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, அவற்றின் பயன்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அத்துடன், கடுமையான நிதி ஒழுக்கத்தைப் பேணி, ஒதுக்கப்பட்ட நிதி வரம்புக்குள் திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும், 2027ஆம் ஆண்டுக்கான பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிக்கும் வகையில் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து திட்டமிடல்களையும் நிறைவு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நீர்ப்பாசனம் மற்றும் பாடசாலைகளுக்கு விசேட கவனம்
கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசன மறுசீரமைப்புப் பணிகளை தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ளும் வகையில், சிறுபோகத்திற்குப் பின்னரும் பெரும்போகத்திற்கு முன்னரும் உள்ள காலப்பகுதியில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் கொள்ளளவை அதிகரித்து அவற்றை விரைவாக புனரமைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பாடசாலைக் கட்டமைப்பை மீளமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இணைப்பது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, குறித்த பாடசாலைகளுக்கு நேரில் சென்று அவற்றின் பௌதிக நிலைமை மற்றும் தரவுகளை ஆராய வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ அல்லது கொடுப்பனவு வழங்கவோ அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாகாண சபைகளில் நிலவும் தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக தொழில்நுட்ப உதவி அதிகாரிகளை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கும் விரைவான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
டித்வா அனர்த்த நிலைமைக்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா நிதியில் 102 பில்லியன் ரூபா மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி மேலும் அறிவுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி, அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், நிதி ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












