இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்குத் தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம், தூதரகப் பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து "யோம்-இ-இஸ்தெஹ்சால் காஷ்மீர்" (காஷ்மீர் சுரண்டல் எதிர்ப்பு தினம்)…

இந்திய ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்குத் தங்கள் வலுவான ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம், தூதரகப் பிரதிநிதிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து "யோம்-இ-இஸ்தெஹ்சால் காஷ்மீர்" (காஷ்மீர் சுரண்டல் எதிர்ப்பு தினம்) நிகழ்வை நினைவுகூர்ந்தது.

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று, இந்தியப் படைகள் அப்பகுதியை முற்றுகையிட்டு, அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அதன் சர்ச்சைக்குரிய நிலையையும் மக்கள் தொகை அமைப்பையும் மாற்றுவதற்காக மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகளின் ஏழாம் ஆண்டு நிறைவு இந்த நிகழ்வில் நினைவுகூரப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர், காஷ்மீர் மக்கள் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகத் தங்களின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருவதை வலியுறுத்தினார். அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்கள், இராணுவ முற்றுகை மற்றும் அடக்குமுறைகளை அவர் கடுமையாகக் கண்டித்ததோடு, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய உலகத் தலைவர்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய திரு. ஷிராஸ் யூனஸ், இந்தியா தனது சர்வதேச வாக்குறுிகளை நிறைவேற்றத் தவறியதால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்க்கப்படாத பழமையான பிரச்சினைகளில் ஒன்றாக காஷ்மீர் உள்ளதாகக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் ஆகியோரின் சிறப்புச் செய்திகளும் இங்கு வாசிக்கப்பட்டன. காஷ்மீர் மக்களுக்கு அமைதியான முறையில் தீர்வு கிடைக்கும் வரை பாகிஸ்தானின் ஆதரவு தொடரும் என அச்செய்திகளில் உறுதி அளிக்கப்பட்டது.

முடிவில், வன்முறைகளை உடனடியாக நிறுத்தி, அடக்குமுறைச் சட்டங்களை விலக்கிக்கொண்டு காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மதிக்குமாறு இந்திய அரசைப் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் கேட்டுக்கொண்டது. அத்துடன், காஷ்மீர் மக்களுக்கு அமைதியான எதிர்காலம் கிடைக்கும் வரை அவர்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனப் பாகிஸ்தான் மீண்டும் உறுதிபூண்டது.