திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத…

திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் இலங்கை அரசை வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்திருந்த சூழலில், மூதூரில் பிரான்ஸ் தொண்டு நிறுவனமான 'ஏசிஎப்' அலுவலக வளாகத்தில் 17 நிவாரணப் பணியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் உயிரிழந்த பலர் பெரும்பான்மையானோர் துப்பாக்கிச்சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டிருந்தமையுடன், அக்காலகட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு அத்தியாவசிய குடிதண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கி வந்த ஒரே சர்வதேச தொண்டு நிறுவனமாக ஏசிஎப் மாத்திரமே செயற்பட்டு வந்தது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர்கள், கொல்லப்பட்டவர்கள் எவரும் ஆயுதம் ஏந்திய போராளிகள் அல்லவென்றும், மோதலில் சிக்கிய பொதுமக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்கி வந்த மனிதநேயப் பணியாளர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். நிவாரணப் பணியாளர்கள் மீதான இத்தாக்குதலானது சர்வதேச மனிதநேய விதிகளுக்கு முரணானது மட்டுமன்றி, மோதலால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடைய வேண்டிய அத்தியாவசிய உதவிகளையும் முற்றாக முடக்கியதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை உட்படப் பல்வேறு சர்வதேச விசாரணைகள், இப்படுகொலைக்கு இலங்கைப் பாதுகாப்புப் படையினரே பொறுப்பு என நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளன. இருப்பினும், இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்கள் போதிய சாட்சியமின்மை, சாட்சிகளுக்கான பாதுகாப்பின்மை மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக தோல்வியடைந்தன.படுகொலைக்கு காரணமானவர்கள்

குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு இந்த விசாரணைகளைக் கண்காணித்த சர்வதேச சுயாதீன புகழ்பெற்ற நபர்கள் குழு, இலங்கை அரசிடம் அரசியல் விருப்பமின்மை நிலவுவதாகக் கூறி விசாரணைகளில் இருந்து விலகிக்கொண்டதை ஐ.நா. நிபுணர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவோ இல்லை. இந்த தொடர்ச்சியான தண்டனையின்மையானது பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆறாத துயரத்தை மேலும் நீட்டிப்பதுடன், நாட்டின் சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையையும் சீர்குலைத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்படுகொலையின் விளைவாக, காந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் மற்றும் கிணறுகள் சீரமைப்பு உள்ளிட்ட பல அத்தியாவசியப் பணிகள் தடைப்பட்டன. இதனால் அப்பகுதியில் இருந்த 3 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பற்ற குடிதண்ணீர், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரினால் பரவும் நோய்களுக்கு ஆளாகினர்.நிவாரண பணியாளர்கள் வெளியேற்றம்அத்துடன், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்ச சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரணப் பணியாளர்கள் வெளியேறியதுடன், 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடையும் வரை நிவாரணப் பணிகளுக்கான இடைவெளியும் பெருமளவில் சுருங்கியது.

உலகளவில் நிவாரணப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், மூதூர் படுகொலை போன்ற கொடூர சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறல் இல்லாமல் இருப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்று ஐ.நா. நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே, மூதூர் படுகொலை தொடர்பில் உடனடியாகச் சுயாதீனமான, நடுநிலையான மற்றும் நம்பிக்கையான விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்குமாறும் அவர்கள் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளனர்.