நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீட்டிக்கும் வகையில் முன்மொழிவு ​செய்யப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (BASL) நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற சந…

நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீட்டிக்கும் வகையில் முன்மொழிவு ​செய்யப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் (BASL) நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன்   ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (12)  நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமரசூரிய, முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தத்திற்குச் சட்டச் சமூகம் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான காரணங்களைச் சங்கம் விரிவாக விளக்கியதாகத் தெரிவித்தார்.

இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள், முன்னாள் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர்கள், கல்வியலாளர்கள் மற்றும் பேராசிரியர்களான சாவித்திரி குணசேகர, லால் விஜயநாயக்க உள்ளிட்ட ஏனைய சட்ட வல்லுநர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இது ஒரு நல்ல மற்றும் வெளிப்படையான கலந்துரையாடல் என தெரிவித்த ராஜீவ் அமரசூரிய, ஜனாதிபதியும் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் கூட்டத்தின் போது விளக்கியதாகக் குறிப்பிட்டார்.

சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், கல்வியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இவ்விடயத்தை ஆய்வு செய்த பிற தரப்பினரையும் உள்ளடக்கிய பரந்த நிபுணர் கலந்தாலோசனையின் பின்னரே இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் இறுதிக் கோரிக்கையாக இருந்தது.

இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிலைப்பாடு எந்தவொரு நபருக்கும் எதிரானதல்ல என்றும், அதனை ஒரு மோதலாகப் பார்க்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல” என்று குறிப்பிட்ட அவர், கூட்டத்தின் போது இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடல் விரிவான ஆலோசனைகளுக்கு வழிவகுக்கும் என்றும், இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு முன்மொழியப்பட்ட திருத்தம் மறுபரிசீலனை செய்யப்படுவதை அனுமதிக்கும் என்றும் இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் நம்புவதாக ராஜீவ் அமரசூரிய கூறினார்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் நீதிபதிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப்படுவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராஜீவ் அமரசூரிய, இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் எந்தவொரு நபர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களையோ அல்லது தாக்குதல்களையோ ஆதரிக்கவில்லை என்றார்.

இரு தரப்பினரும் எதேனும் உடன்பாட்டை எட்டினார்களா என்று கேட்டபோது, அவ்வாறான எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்றாலும், பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அரசியலமைப்பைத் திருத்துவது அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதைக் குறிப்பிட்ட அமரசூரிய, அத்தகைய நடவடிக்கை தவறு என நம்பினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்துக்கும் உண்டு என்றார்.

நீதிமன்றங்களின் சுதந்திரத்திற்காகவும் சட்டத்தின் ஆட்சிக்காகவும் நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவரும் முதிர்ந்த அரசியல் தலைவரான ஜனாதிபதி, எழுப்பப்பட்ட கவலைகளைக் கவனமாகப் பரிசீலிப்பார் என்று இலங்கை வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

“இன்றைய கலந்துரையாடலுக்குப் பிறகு, இது ஒரு நேர்மறையான திசையில் நகரும் என்று நான் நம்புகிறேன்” என ராஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.