செம்மணி மனிதப் புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதை வலியிறுத்தும் போராட்டத்திற்கு அனைத்துப் போராளிகளினதும் ஆதரவு வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.இன்று(14.08.2026) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வை…
செம்மணி மனிதப் புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும் என்பதை வலியிறுத்தும் போராட்டத்திற்கு அனைத்துப் போராளிகளினதும் ஆதரவு வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அழைப்பு விடுத்துள்ளார்.இன்று(14.08.2026) அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர் போராட்டம்அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும் முகமாக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். இலங்கை தீவில் தமிழ் மக்கள் அரச படைகளாலும், அரச படைகளின் அனுசரணையின் கீழ் இயங்கிய ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் கொத்துக் கொத்தாக பல்வேறு இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளார்கள்.
1956 தொடக்கம் 2009 யுத்தம் மௌனிக்கும் வரையான காலப்பகுதில் இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன் ஒரு ஆதார பூர்வமான வெளிப்பாடே செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம். இதுவரை காலமும் தமிழ் தரப்புகளால் முவைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் கேட்டு நின்ற சர்வதேசத்திற்கு உண்மை ஒருக்காலும் உறங்காது என்பதை வெளிப்படுத்தும் முகமாக படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகள் என்புக் கூடுகளாகச் சாட்சியம் அளித்துள்ளார்கள்.தமிழ் இனப்படுகொலை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று எங்கள் இனத்திற்கு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இந்தச் செம்மணி மனிதப் படுகொலை திகழ்கின்றது.இனியும் சர்வதேசம் மௌனமாகத் தான் இருக்கப்போகின்றதா? என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை மீது தமிழ் மக்கள் வைத்துள்ள அதீத நம்பிக்கை இன்னும் குறையவில்லை.செம்மணி உள்ளிட்ட அனைத்து படுகொலைகளுக்குமான சர்வதேச விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதியை நிலைநாட்ட காலம் தாழ்த்தாது முன்வர வேண்டும்.
இந்தக் கோரிக்கையை முன்நிலைப்படுத்தி 14ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம் -02 போராட்டத்திற்கு எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் முழுமையான ஆதரவினை வழங்குவதுடன், எமது கட்சியின் உறுப்பினர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களால் இயன்ற ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.போராட்டத்தை குழப்ப நினைக்கும் அரசு அத்துடன், இந்தப் போராட்டத்தை மழுங்கடிக்கும் விதமாகவும், எமது மக்கள் மத்தியில் போராட்ட குணத்தை இல்லாமல் செய்யும் நோக்குடனும் அரச தரப்பு அமைப்புகளால் குறித்த தினங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் அறிகின்றோம்.
அன்றிருந்து இன்றுவரை எமது கைகளைக் கொண்டு எமது கண்களையே குத்தும் கைங்கரியத்தை அரசு பல்வேறு வழிகளிலும் கச்சிதமாக செய்து வருகின்றது.அந்த நிலையில் இதுவும் ஆச்சரியமான விடயம் அல்ல.
ஆனால் எமது மக்களின் தன்மானத்தில் கை வைக்கும் நிகழ்வுகளுக்கு எமது மக்களே தகுந்த பாடங்களை வழங்குவார்கள். எத்தனை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் கொண்ட கொள்கையின்படி, உறுதியாக நின்று நீதியின் ஓலம் -02 போராட்டத்தினை வலுவுள்ளதாக்கி சர்வதேசத்திற்கு ஒருமித்த செய்தியை எமது மக்கள் தெரிவிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.












