இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில்…
இலங்கைச் சிறைச்சாலை அமைப்பிற்குள் பெண் கைதிகள் எதிர்கொள்ளும் கடுமையான அநீதியான மற்றும் அசிங்கமான பரிசோதனை முறைகள் குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், வெலிக்கடை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் கடுமையான மன மற்றும் உடல்ரீதியான சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அல்லது வேறு வெளிப்புற இடங்களில் இருந்து கைதிகள் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்படும் சந்தர்ப்பங்களில், அவர்கள் ஆடைகள் இன்றி முழுமையாக நிர்வாணமாக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அங்கு கைதிகளின் ரகசிய உறுப்புகள் கூட மின்சார டார்ச் விளக்குகளின் உதவியுடன் பரிசோதிக்கப்படுவதாகவும், இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரிகமான செயலாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் சரியான முறையில் மறைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஹிருணிகா பிரேமச்சந்திர, சில சந்தர்ப்பங்களில் சிறைச்சாலைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அல்லது அதிகாரிகளுக்குக்கூட இந்த காட்சிகள் தென்படக்கூடிய நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சோதனைகளின் போது சிறைச்சாலை பெண் அதிகாரிகள் கைதிகளின் உடலமைப்பு குறித்து அவதூறான மற்றும் பாலியல் ரீதியான விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“சிறைவாசிகளும் மனிதர்களே” என்பது சிறைச்சாலைச் சுவரில் மட்டுமே எழுதப்பட்ட வாசகமாக மாறியுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுபோன்ற கேவலமான செயல்களால் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் மீது கடுமையான வெறுப்பும் குரோதமும் உருவாகிறது என்று சுட்டிக்காட்டினார்.
சமீபகாலமாக சிறைச்சாலைகளுக்குள் ஏற்பட்ட பல்வேறு பதற்றமான சூழ்நிலைகளுக்கும் மோதல்களுக்கும் இதுபோன்ற நடத்தைகளும் மறைமுகமாகப் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக அவர் கருத்து தெரிவித்தார்.
குறிப்பாகக் குழந்தைகள் உள்ள தாய்மார்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு நிலைகளிலுள்ள பெண்கள் இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு இந்தச் சூழ்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.












