தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது. இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்க…

தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, 3,371 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதங்களைச் செலுத்த முடியாமலும் பல ஆண்டுகளாக சிறைகளில் வாடி வருகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

திரட்டப்பட்ட தகவல்களின்படி, 28 சிறைகளில் 1,940 கைதிகள் அபராதம் செலுத்த முடியாததாலும், 21 சிறைச்சாலைகளில் 1,431 கைதிகள் பிணைத்தொகை செலுத்த முடியாததாலும் வாடி வருகின்றனர்.ஜனாதிபதியின் பொது மன்னிப்பு விடுதலை பெறமுடியாத நிலையில், கடுமையான அழுத்தத்தில் இருப்பவர்களே சிறைச்சாலைப் போராட்டங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிணை வழங்கப்பட்ட பிறகு ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 325 ஆகும். கடந்த ஆண்டு நிலவரப்படி, இலங்கை முழுவதும் உள்ள 21 சிறைச்சாலைகளில் இந்த நிலை காணப்படுகிறது. இவ்வாறாக எந்தக் காரணமும் இன்றி சிறையில் இருக்கும் மக்களின் உணவு மற்றும் பிற வசதிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்று சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிதி வசதியின்மை, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய இயலாமை மற்றும் பிணை வழங்க உறவினர்கள் இல்லாதது ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்கள் என கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.இது குறித்துக் கேட்டபோது, ​​இதுபோன்ற சூழ்நிலைகள் பதிவாகி வருவதாகவும்இ தீர்வுகளைக் கண்டறிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய கைதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும்  ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்படும்போது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.