கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தி…
கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்குச் சொந்தமான வீடொன்றில் 2021 ஆம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.
கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் சுவசெரிய முதலுதவி அதிகாரி அஸலி உபேக்ஷா நேற்று சாட்சியமளித்தார். மேலதிக நீதவான் லிலான் வருசூவிதாரன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். சிறுமியின் மர்ம மரணம்“கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சிறுமியைத் தேடி அந்த வீட்டின் கராஜ் பகுதியினூடாக நுழைந்தேன். அங்கே படிகளில் சிறுமி ஒருவர் இருத்தப்பட்டிருந்தார். அவர் மீது படுக்கை விரிப்பு ஒன்று போர்த்தப்பட்டிருந்தது.
அத்துடன், சிறுமியின் உடலில் ஆடைகள் இருக்கவில்லை. அந்த நேரத்தில் எரியும் ஒரு வாசனை உணரப்பட்டது. அது, எரியும் போது தோலில் இருந்து வெளிவரும் வாசனையாகும். எனினும் அது எவ்வகையான வாசனை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது.
கழுத்து, நெஞ்சு, கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதை என்னால் அடையாளம் காண முடிந்தது. சிறுமி என்னிடம் தண்ணீர் கேட்டார். அதற்கு மேல் வேறு எதையும் அவர் என்னிடம் கூறவில்லை. உடனடியாக சிறுமியை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிறுமி இறந்த பின்னரே பொலிஸார் என்னிடம் வாக்குமூலம் பெற்றனர்.
பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் சுவசரிய அவசர சேவை தொலைபேசி இலக்கமான 119 க்கு இச்சம்பவம் தொடர்பாக கிடைத்த ஆரம்ப அழைப்புக்குப் பதிலளிக்கும் போது தீக்காயங்களுக்கு உள்ளானவர்களை உடனடியாகக் குளிப்பாட்டுவது உள்ளிட்ட அடிப்படை முதலுதவிகள் குறித்து அறிவுறுத்தினோம். இருந்த போதிலும், நாங்கள் அங்கே சென்றடையும் போது குறித்த தரப்பினரால் அவை பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
மேலும், இந்த வழக்கில் சாட்சியமளிப்பது தொடர்பில் பொலிஸார் எங்களுக்கு எந்தவிதமான முறையற்ற அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டில் எரிவாயு காரணமாக தீப்பற்றிய ஒருவர் வீட்டில் உள்ளதாக சுவசரிய சேவைக்கு ஆரம்ப அழைப்பின் மூலம் பெறப்பட்டதாக தெரிவித்து, அதே ஆண்டில் தான் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் தொடர்பில் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணைக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
சுவசரிய சேவைக்கு பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அழைப்பு விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், இச்சம்பவமும் அவ்வாறே அமைந்திருக்கும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
தீக்காயங்களை தவிர, எரிவாயு காரணமாக தீப்பற்றி காயமடைந்த நபர் ஒருவர் குறித்தும் இச்சம்பவம் தொடர்பான ஆரம்ப சுவசரிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என எதிர்த்தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.












