மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்ற நிலை தனிந்துள்ளமையினால் உலக எண்ணெய் சந்தையில் விலைகள் தளம்பலடையும் பின்னணியில், இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC), ஜன…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்ற நிலை தனிந்துள்ளமையினால் உலக எண்ணெய் சந்தையில் விலைகள் தளம்பலடையும் பின்னணியில், இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனம் (CPC), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் அவசர சந்திப்பொன்றைக் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளிதழ் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஜே. ராஜகருணா, உலக எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்குக் கடுமையான அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், நிலவும் இவ்வாறான மோசமான போக்கு குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முழுமையாக எரிபொருள் இறக்குமதியை மாத்திரம் நம்பியிருக்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது ஒரு பாரிய சவாலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் காணப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45 சதவீதத்தாலும், பெட்ரோல் விலை 30 சதவீதத்தாலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் மசகு எண்ணெய் (Crude Oil) விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

"எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக நாம் ஜனாதிபதியிடம் சந்திப்பொன்றைக் கோரியுள்ளோம். எரிபொருள் நுகர்வைக் குறைப்பது அவசியமானது" என கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் சந்தையில் உள்ள ஏனைய சில்லறை எரிபொருள் விநியோகஸ்தர்களும் தற்போதைய விலைகளின் கீழ் எரிபொருளை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளதாகத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மற்றும் உக்ரைன் தொடர்பான மோதல்கள் காரணமாக விநியோகம் தடைப்பட்டதால் மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் மசகு எண்ணெய் விலை இந்த வாரம் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

சில வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் தோராயமாக 110 அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தித் திறன் குறைந்துள்ளமை, மின் உற்பத்திக்கான எரிபொருளின் தேவையினை மேலும் அதிகரித்துள்ளது.

இது எங்களுக்கு மற்றொரு கடுமையான சவாலாகும். போதுமான அளவு நீர்மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக எமது களஞ்சியங்களிலிருந்து நாளுக்கு நாள் அதிகரிக்கும் எரிபொருள் தொகையை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.