முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ரகல இந்த…

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்காகக் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இருவருக்கு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்தி சி. ரகல இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பிணை நிபந்தனைகளாக தலா 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும், தலா 50,000 ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளும் விதிக்கப்பட்டன. எனினும், பிணை நிபந்தனைகளை உடனடியாக நிறைவேற்றத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் ஆஜராக வேண்டும் என்றும், அவர்களது வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எனக் கூறப்படும் சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் என்ற தனுஷ் ஆகியோருக்கே இந்தப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி, "துர்கா" என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட தற்கொலைத் தாக்குதலாளர், கொழும்பு இராணுவத் தலைமையக நுழைவாயிலுக்கு அருகே தாக்குதல் நடத்தியிருந்தார். இந்தத் தாக்குதலில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், அவருக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த இராணுவ சார்ஜென்ட் ஒருவரும், மூன்று கொமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு மேலாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்குகளும் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

பெர்னாண்டோபுல்ல கொலை வழக்கில் அவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன தொடர்பான வழக்கில் பிணை மனு மீதான தீர்ப்பு ஆகஸ்ட் 7 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.