இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிங்களவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று தேசிய சுதந்த…
இலங்கையை குற்றச்செயல்களின் இராச்சியமாக சர்வதேசத்துக்கு காண்பிப்பதற்காக சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிங்களவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்படுகிறது. அதற்கு நீதி கோரி கத்தோலிக்க அருட்தந்தையர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை குற்றங்கள் நிறைந்த இராச்சியம், இங்கு யுத்தக்குற்றங்களும், இனவழிப்பும் இடம்பெற்றுள்ளன என்று சர்வதேச அரங்குக்கு காண்பிக்கும் செயற்பாடுகளே தற்போது இடம்பெறுகிறது.
இந்த நாட்டில் வரி செலுத்துவதில் சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளார்கள். சிங்களவர்களின் வரிப்பணத்தைக் கொண்டு காணாமல் போனோர் அலுவலகம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு பணிகளை இந்த அரசாங்கம் வந்தததன் பின்னர் தீவிரப்படுத்தியுள்ளது.
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் அரச நிறுவனமாக காணப்பட்டாலும் அது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே செயற்படுகிறது. புலிகள் அமைப்பால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிங்கள பொலிஸார், சிங்கள மக்கள் பற்றி காணாமல் போனோர் அலுவலகம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரிகளை இலக்காகக் கொண்ட செயற்பாடுகளே தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இனப்படுகொலையும், யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றதாக சர்வதேசத்தக்கு காண்பிக்கும் போக்கு காணப்படுகிறது என்றார்.












