சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்…

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பில், ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இக்குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் கைதிகளின் அடர்த்தியைக் குறைப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுதல், சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், புதிய சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்துதல், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் சமூக சீர்திருத்தத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டத்தைக் கொண்டுவருவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் ஆகியோருக்கு இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக அடையாளம் காண்பது தொடர்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

அத்துடன், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் நபர்களைச் சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, வீட்டுக் காவலில் வைப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிணை வழங்கும் நடைமுறைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்தல், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைத்தல், சிறிய குற்றங்களுக்குச் சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாக மாற்றுத் தண்டனை முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், சிறைச்சாலை நிர்வாகத்தை நவீனமயப்படுத்துதல், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு வேலைத்திட்டங்களை வலுப்படுத்துதல், சிறியளவிலான போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் ஏனைய சிறிய குற்றங்களுக்குச் சிறைத்தண்டனை வழங்குவதற்குப் பதிலாகச் சமூக சேவை போன்ற மாற்று வழிமுறைகளைப் பரிசீலித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் மற்றும் அவர்களுடன் தங்கியுள்ள 5 வயதுக்குக் குறைந்த குழந்தைகளின் நலன் தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழந்தைகளை 5 வயதுக்குப் பின்னர் நன்னடத்தைப் பராமரிப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களைப் புனர்வாழ்வு மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு வழிநடத்துதல், அத்துடன் பிணைத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த விடயத்தை மேலும் கலந்துரையாடுவதற்குத் குழுத் தலைவர் முன்வைத்த யோசனைக்குக் குழு இணக்கம் தெரிவித்தது.

மேற்படி விடயம் தொடர்பில் குழுவின் இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னர், சிறைச்சாலை அதிகாரிகளைச் சந்தித்து அவர்களது கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பல சிறைச்சாலைகளுக்குச் சென்று அவதானிப்புகளை மேற்கொள்வதற்கும் குழு இணக்கம் தெரிவித்தது.

இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் கௌரவ உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அஜித் பி. பெரேரா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், முஜிபுர் ரஹ்மான், எம். கே. எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ. டி. சூரியபண்டார ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கே. சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் சட்டத்தரணி ஹசாரா லியனகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன, பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஆர். பிரசாத் ஹேமந்த குமார உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.