கல்முனையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சமூக அமைப்புகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், வர்த்தக அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ…
கல்முனையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சமூக அமைப்புகள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள், வர்த்தக அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி தெரிவித்தார்.
கல்முனை மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் உத்தியோகபூர்வ இணையதள அங்குரார்ப்பணம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு, அதன் தலைவர் சிரேஷ்ட மனநல ஆலோசகர் என்.எம். நௌஸாத் தலைமையில் கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலய எம்.பி. முகைதீன் ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த (16) நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றி அவர், கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 11 ஊர்களிலும் திண்மக் கழிவுகளை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டது, இதற்குத் தீர்வு காண சமூக அமைப்புகள், பள்ளிவாசல்கள் மற்றும் ஏனைய தரப்புகளுடன் தன்னால் பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது. திண்மக் கழிவுப் பிரச்சினைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில் சட்டரீதியான சிக்கல்கள் ஏற்படாத வகையில் அதனை ஒழுங்குபடுத்தி முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு சமூகத்துக்கும் உள்ளது.
மேலும், கல்முனை மாநகர சபையின் எதிர்காலத் தேவைகளுக்காக சுமார் 10 ஏக்கர் தனியார் காணியொன்றை கொள்வனவு செய்வது தொடர்பாக தாம் ஆணையாளராக இருந்த காலத்தில் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், அதற்கான சில தீர்மானங்கள் இடைநிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை தற்போது சமூக, அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அமைப்பாக மாறுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்களை கருத்திற்கொண்டு மாற்று ஏற்பாடுகள் மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் அவசியம்.
கல்முனையின் எதிர்கால வளர்ச்சிக்காக பள்ளிவாசல்கள், பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கங்கள், சமூக சேவை அமைப்புகள் மற்றும் அரபிக்கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தனித்தனியாக செயற்படும் சமூக வளங்களை ஒன்றிணைத்தால், கல்முனையில் மிகப்பெரிய சமூக வளத்தை உருவாக்க முடியும். கல்முனையில் நீண்டகாலமாக நிலவி வந்த சில பிரச்சினைகள் கலந்துரையாடல்கள் மற்றும் சரியான தீர்மானங்கள் மூலம் தீர்க்கப்பட்டுள்ளது. சரியான திட்டமிடலுடன் தீர்மானங்களை மேற்கொண்டால் அனைவரும் அதற்கு ஏற்ப ஒத்துழைக்க முடியும்.
அதேவேளை, கல்முனை மாநகர சபைக்கு ஒதுக்கப்படும் நிதி, அதன் மக்கள் தொகை, வட்டாரங்களின் எண்ணிக்கை மற்றும் ஊர்களின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு ஏற்ப போதுமானதாக இருக்க வேண்டும். சிறிய பிரதேச சபைகளுக்கு வழங்கப்படும் நிதி அளவிலேயே அதிக மக்கள் தொகையையும் அதிக வட்டாரங்களையும் கொண்ட கல்முனைக்கும் நிதி வழங்கப்படுவது நடைமுறையில் உள்ள குறைபாடாகும். மக்கள் தொகை மற்றும் தேவைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன்.
கல்முனையின் எதிர்கால வளர்ச்சிக்காக இன்று எடுக்கப்படும் சில தீர்மானங்களின் பயனை தற்போதைய தலைமுறையினர் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போகலாம். அவற்றின் பயனை எதிர்கால தலைமுறைகள் அனுபவிக்கும் வகையில் நீண்டகாலத் திட்டமிடல் அவசியம். கல்முனை தனித்தனியாக இழுத்துச் செல்லப்படும்போது அதன் வளங்களை முழுமையாகப் பயன்படுத்த முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அதற்கு பணத்தைவிட முதலில் தேவைப்படுவது ஒற்றுமையும் சரியான திட்டமிடலுமாகும்” எனவும் ஏ.ரீ.எம்.றாபி தெரிவித்தார்.
மேலும், தாம் தற்போது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கடமையாற்றினாலும், எனது ஊருக்கு அடுத்தபடியாக கல்முனை மீது தனக்குள்ள அக்கறை தொடர்ந்தும் இருப்பதாகவும், எதிர்காலத்திலும் தேவையான சந்தர்ப்பங்களில் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் ஏ.எல்.பஸ்மின் (MRICS) பாராட்டப்பட்டதுடன், எம்.நௌஸாத் ஆதம்பாவா (SLEAS) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபராக வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி (SLAS) கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் கல்முனை பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வின் முடிவுரையை கல்முனை மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் நிர்வாக செயலாளர் சட்டமாணி எம்.வை.எம்.வை. இம்றான் நிகழ்த்தினார்.












