மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைஷா, தனது 3 வயதில் விளையாடும்போது தற்செயலாக விழுங்கிய பிளாஸ்டிக் பேனா மூடி, அவரது இடது நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாகச் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சிறுமிக்கு, எக்ஸ…

மும்பையைச் சேர்ந்த 10 வயது சிறுமி மைஷா, தனது 3 வயதில் விளையாடும்போது தற்செயலாக விழுங்கிய பிளாஸ்டிக் பேனா மூடி, அவரது இடது நுரையீரலில் கடந்த 7 ஆண்டுகளாகச் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது.

பல ஆண்டுகளாகத் தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட சிறுமிக்கு, எக்ஸ்-ரே பரிசோதனையில் பிளாஸ்டிக் பொருள் சிக்காததால், மருத்துவர்கள் அதனை காசநோய் மற்றும் ஆஸ்துமா எனத் தவறாகக் கருதிச் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் மும்பை எஸ்.ஆர்.சி.சி. (SRCC) குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் பிரான்கோஸ்கோபி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மூச்சுக்குழாயின் ஆழத்தில் பேனா மூடி சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நீண்டகாலமாகப் பேனா மூடி இருந்ததால் நுரையீரலின் ஒரு பகுதி கடுமையாகச் சேதமடைந்து சீழ் பிடித்திருந்தது. இதனையடுத்து, மருத்துவக் குழுவினர் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் பேனா மூடியையும், சேதமடைந்த நுரையீரலின் ஒரு பகுதியையும் வெற்றிகரமாக அகற்றினர். தற்போது சிறுமி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறு குழந்தைகளுக்குத் தொடர் இருமல் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், பெற்றோர் அதனை எளிய விஷயமாக அலட்சியப்படுத்தாமல், உடனடியாக முறையான சிறப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.