இலங்கையானது, நாடளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்களவில் இடம்பெறும் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் இவ்வேளையில், டெங்குப் பரவலைத் தடுப்பதற்கும், பரிசோதனைகள் மூலம் அதைக் கண்டுபிடிப்பதற்கும், அதற்குப் பதிலளிப்பதற்குமான இலங்கையின் திறனைப் பலப்படுத்துவதற்காக, இ…

இலங்கையானது, நாடளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்களவில் இடம்பெறும் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும் இவ்வேளையில், டெங்குப் பரவலைத் தடுப்பதற்கும், பரிசோதனைகள் மூலம் அதைக் கண்டுபிடிப்பதற்கும், அதற்குப் பதிலளிப்பதற்குமான இலங்கையின் திறனைப் பலப்படுத்துவதற்காக, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமானது, இலங்கைச் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து பொதுச் சுகாதார பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் காவிகள் மூலம் பரவும் நோய்களுக்கான பதிலளிப்பு என்பன தொடர்பான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கப் போர்த் திணைக்களத்தின் வெளிநாட்டு மனிதாபிமான, அனர்த்த மற்றும் குடிமை உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் (OHDACA) மூலம் நிதியளிக்கப்படும் இம்முன்முயற்சியானது, தடுப்பு மருத்துவம், நோய்க் கண்காணிப்பு, பூச்சியியல் மற்றும் ஒருங்கிணைந்த நோய்க்காவிகள் முகாமைத்துவம் ஆகிய விடயங்களில் அமெரிக்க நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக, அமெரிக்கப் பசிபிக் இராணுவம் (USARPAC) மற்றும் அமெரிக்க இராணுவத்தின் 18ஆவது கள மருத்துவக் கட்டளைப்பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களையும், இலங்கைச் சுகாதார அமைச்சினைச் சேர்ந்த அவர்களது எதிரிணை சகாக்களையும் ஒன்றிணைக்கிறது.

கொழும்பில் மேற்கொள்ளப்படும் இம்முன்முயற்சியானது, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை ஒழிக்கும் முயற்சிகள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மற்றும் முன்கூட்டிய எதிர்வுகூறல் அடிப்படையிலான தடுப்பு வழிமுறைகள் ஆகியவற்றிற்குத் துணைபுரிந்து, இலங்கையின் நாடு தழுவிய டெங்குத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவி செய்கிறது.

“இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் ஒரு தீவிரமான சவாலாக டெங்கு தொடர்ந்து விளங்குகின்றது” எனத் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல் குறிப்பிட்டார். “இப்பங்காண்மையினூடாக, தடுப்பு மருத்துவம், பூச்சியியல், நோய் கண்காணிப்பு மற்றும் நோய்க்காவிகளின் கட்டுப்பாடு ஆகிய விடயங்களில் தனது நிபுணத்துவத்தை அமெரிக்கா பகிர்ந்துகொள்கிறது. இன்றைய நோய்ப் பரவலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் இலங்கை சமூகங்களைப் பாதுகாக்கக் கூடிய நிலைபேறான திறன்களையும் அது உருவாக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

CARAT மற்றும் Atlas Angel போன்ற பயிற்சிகளில் இராணுவங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் மொன்டானா தேசிய காவற்படையுடனான பயிற்சிப் பங்காண்மை ஆகியவற்றினூடாக, பாதுகாப்பு, மீண்டெழும் தன்மை மற்றும் தயார்நிலை ஆகியவற்றை ஊக்குவிக்கும், பரந்த மற்றும் நீண்டகாலமாக நீடித்திருக்கும் அமெரிக்க-இலங்கைப் பங்காண்மையினை இம்முன்முயற்சி பிரதிபலிக்கிறது. தேசிய மீண்டெழும் தன்மையினைப் பலப்படுத்தி, இன்னும் அதிக பாதுகாப்பான ஒரு இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்குப் பங்களிப்புச் செய்யும் வகையில், இயற்கைப் பேரிடர்கள் மற்றும் மனிதாபிமான அவசரநிலைகள் முதல் டெங்கு போன்ற பொதுச் சுகாதார அச்சுறுத்தல்கள் வரையிலான பொதுவான சவால்களுக்குப் பதிலளிப்பதற்குத் தேவையான திறன்களை அமெரிக்காவும் இலங்கையும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புகின்றன.