வடக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பேருந்து தரிப்பு நிலையங்களையும் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்களுக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள்…

வடக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து பேருந்து தரிப்பு நிலையங்களையும் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்களுக்கு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்க நடவடிக்கை

இதற்கமைய, நெடுங்கேணி - வவுனியா, புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு, மாங்குளம் - முல்லைத்தீவு, பரந்தன் - கிளிநொச்சி மற்றும் சிலாபத்துறை - மன்னார் ஆகிய பேருந்து நிலையங்களின் பேருந்து சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தி, பயணிகளுக்கு பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பேருந்து தரிப்பு நிலையங்களுக்குள் பேருந்துகள் உரிய முறையில் சென்று 2 முதல் 3 நிமிடங்கள் வரை தரித்து நின்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்வதுடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, பேருந்து தரிப்பு நிலையங்களுக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்த்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொண்டு உரிய பேருந்து தரிப்பு நிலையங்களைப் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உதவியை நாடும் அதிகார சபை

இதன்படி, இலங்கைப் போக்குவரத்துச் சபையும் தனியார் பேருந்து சேவைகளும் இணைந்து குறித்த பேருந்து தரிப்பு நிலையங்களில் பேருந்துகள் முறையாகச் சென்று சேவை வழங்குவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அதிகாரசபை கோரியுள்ளது.

மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவுறுத்தல்களுக்கு இணங்கிச் செல்லத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான நடைமுறைகள் மீறப்படுவதை பொதுமக்கள் அவதானித்தால், தகுந்த ஆதாரங்களுடன் (ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) 071 9090900 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

“உகந்த போக்குவரத்துச் சேவையே எமது முதன்மையான நோக்கம்” என்ற அடிப்படையில், பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அனைத்து பேருந்து சேவை வழங்குநர்களும் ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.