கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி எல்லைப் பகுதியிலுள்ள எருமைதீவில் இரவு நேரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவினரை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர். கிராஞ்சி–பொன்னாவெளி பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 238 ஏக்கர் நிலப்பர…
கிளிநொச்சி – பூநகரி, கிராஞ்சி எல்லைப் பகுதியிலுள்ள எருமைதீவில் இரவு நேரத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழுவினரை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கிராஞ்சி–பொன்னாவெளி பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 238 ஏக்கர் நிலப்பரப்பில் 34 காற்றாலைகளை அமைக்கும் காற்றாலை மின் திட்டத்திற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு பிரதேச மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் பொது அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரவு வேளையில் வாகனமொன்றில் சிலர் எருமைதீவு பகுதியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, கிராம மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டபோது, ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு தங்குவதற்காக தற்காலிக நிழல் கொட்டகையொன்றை அமைத்துக் கொண்டிருந்ததாக அந்தப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் மக்கள் விசாரணை நடத்தியபோது, காற்றாலைத் திட்டத்தின் செயற்பாடுகளை கொழும்பிலிருந்து கண்காணிப்பதற்கும், அங்கிருந்து தகவல்களைப் பரிமாறுவதற்கும் கண்காணிப்பு கோபுரமொன்றை அமைக்கும் நோக்கில் வந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காற்றாலைத் திட்டத்திற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் தாங்கள் வெளியேறுவதாகத் தெரிவித்து அப்பகுதியிலிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தபோது, சம்பவம் தொடர்பில் தனக்கு எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்ததாகவும் அந்தப் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், குறித்த காற்றாலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2,000 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படக்கூடும் என மக்கள் தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் காணப்படுவதால், காற்றாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 12 இடங்களில் சுமார் 7,000 தென்னங்கன்றுகள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு காற்றாலையின் விட்டம் சுமார் 165 மீற்றர் எனவும், ஒரு காற்றாலையை நிறுவுவதற்கு சுமார் 7 ஏக்கர் காணி தேவைப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்டுமானப் பணிகளின்போது அதிகளவு சீமெந்து உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அப்பகுதியின் இயற்கை வளங்கள், விவசாய நிலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படக்கூடும் எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், காற்றாலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வயல் நிலங்கள், வழிபாட்டுத் தலங்கள், குடிநீர் கிணறுகள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய வளங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் வாழும் வளமான பகுதிகளை பாதிக்கும் வகையில் திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பதிலாக, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மாற்றுக் காணிகளை அடையாளம் கண்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் எதிர்ப்பையும், அவர்களின் வாழ்வாதாரம், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் கருத்திற்கொண்டு, குறித்த காற்றாலைத் திட்டத்தை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீளாய்வு செய்ய வேண்டும் எனவும் பொது அமைப்பின் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.












