தனது பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்காக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் கிரிக்கெட் உருமாற்றக் குழு ஆகியவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார். தான் தலைமை தாங்க…

தனது பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதற்காக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் கிரிக்கெட் உருமாற்றக் குழு ஆகியவற்றிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார்.

தான் தலைமை தாங்கிய தேர்வுக் குழு நீக்கப்பட்ட விதம், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததோடு, நிதி மற்றும் தொழில்ரீதியான இழப்புகளையும் ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே தனது ஒப்பந்தம் தன்னிச்சையாக முறிக்கப்பட்டதாகக் கூறி, அது தொடர்பாக முன்னர் ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் சாதகமான பதில் எதுவும் பெறப்படவில்லை என்றும் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விக்ரமசிங்க, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவராக 2025 டிசம்பரில் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார். அக்குழுவில் தரங்க பரணவிதான, இந்திகா டி சாரம், வினோதன் ஜோன் மற்றும் ரசஞ்சலி டி அல்விஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

இருப்பினும், தேசிய தேர்வு அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பைத் தொடர்ந்து, 2026 மே மாதம் அந்தக் குழு மாற்றப்பட்டது.

விக்ரமசிங்க அந்த நேரத்தில் இந்த நடவடிக்கை குறித்து கவலைகளை எழுப்பியதோடு, தனது ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே தனது பதவிக்காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது தொடர்பாக விளையாட்டு அமைச்சகம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து எழுத்து பூர்வமான விளக்கத்தை முறைப்படி கோரியிருந்தார்.