இலங்கையில் உள்ள ஐபோன் பயனாளர்கள் மத்தியில் புதிய ‘ஜீரோ-கிளிக்’ (zero-click) இணையத் தாக்குதல் ஒன்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது தொடர்பாகப் பலரும் இலங்கை கணினி அவசர எதிர்வினைப் பிரிவிடம் (Sri Lanka CERT) முறைப்பாடு செய்துள்ளனர். பழைய பதிப்புடைய ஐபோன் (…

இலங்கையில் உள்ள ஐபோன் பயனாளர்கள் மத்தியில் புதிய ‘ஜீரோ-கிளிக்’ (zero-click) இணையத் தாக்குதல் ஒன்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியது தொடர்பாகப் பலரும் இலங்கை கணினி அவசர எதிர்வினைப் பிரிவிடம் (Sri Lanka CERT) முறைப்பாடு செய்துள்ளனர்.

பழைய பதிப்புடைய ஐபோன் (iOS) இயங்குதளங்களை இயக்கும் சாதனங்களை இந்தத் தாக்குதல் இலக்கு வைப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தீங்கிழைக்கும் இணைப்புகளை (malicious links) கிளிக் செய்வதோ, QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதோ அல்லது வேறு எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதோ தேவையின்றி, அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தத் தாக்குதல் வழிவகுக்கிறது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் இத்தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவங்களை எதிர்கொண்டுள்ளதாகவோ அல்லது அறிவித்துள்ளதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சுத்தமானது வெளிநாட்டுப் பயனாளர்களுக்கு மாத்திரம் உரியதல்ல என்பது தெளிவாகிறது.

இத்தாலிய இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் தடயவியல் விசாரணையின்படி, இணைக்கப்பட்ட சாதனங்களை (linked devices) ஒத்திசைப்பது தொடர்பான பாதிப்புகளைத் தாக்குதலாளர்கள் பயன்படுத்தக்கூடும் எனத் தெரியவருகிறது. பதிவாகிய சில சம்பவங்களில், பாதிக்கப்பட்ட கணக்குகள் மூலம் பணம் அனுப்புமாறு கோரும் அங்கீகரிக்கப்படாத வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

சில சந்தர்ப்பங்களில், வாட்ஸ்அப்பின் 'இணைக்கப்பட்ட சாதனங்கள்' அமைப்புகளின் கீழ் சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை என்பதைப் பயனாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் கணக்கைக் கைப்பற்றியதை எளிதில் கண்டறிவது கடினமாகியுள்ளது. கணக்குகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த பின்னர், வாட்ஸ்அப் குழுக்களின் நிர்வாகி (administrator) உரிமைகளையும் தாக்குதலாளர்கள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

16.7.12 க்கும் முந்தைய iOS பதிப்புகளை இயக்கும் ஐபோன்களுடன் இந்தத் தாக்குதல் தொடர்புடையதாகத் தெரிவிக்கப்படுவதால், காலாவதியான இயங்குதளங்கள் ஏற்படுத்தும் ஆபத்துகள் இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றன.

QR-குறியீடு ஃபிஷிங் அல்லது தீங்கிழைக்கும் இணைப்புகளை உள்ளடக்கிய வழக்கமான வாட்ஸ்அப் மோசடிகளைப் போலன்றி, இந்த ஜீரோ-கிளிக் நுட்பத்திற்குப் பாதிக்கப்பட்டவரின் நேரடி ஈடுபாடு எதும் தேவையில்லை. இதனால் பயனாளர்கள் இதனை அடையாளம் கண்டு தடுப்பது மிகவும் கடினமானதாக அமைகிறது.

பயனாளர்கள் உடனடியாகத் தங்களது ஐபோன்களை ஆதரிக்கப்படும் சமீபத்திய iOS பதிப்பிற்குப் புதுப்பிக்குமாறும், மிக அண்மைய வாட்ஸ்அப் புதுப்பிப்பை (update) நிறுவுமாறும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், வாட்ஸ்அப்பின் இரு-படி சரிபார்ப்பு (two-step verification) மற்றும் அரட்டைப் பூட்டு (Chat Lock) அம்சங்களை இயக்குமாறும் பயனாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அறியப்பட்ட ஒரு தொடர்பிலிருந்து பணம் அல்லது ரகசியத் தகவல்களைக் கோரும் அசாதாரண கோரிக்கைகள் பெறப்படும்போதும், அக்கோரிக்கைகள் உண்மையானவைதானா என்பதை வேறு நம்பகமான தொடர்பு ஊடகம் மூலம் சுயாதீனமாகச் சரிபார்க்குமாறும் அவர்கள் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

நிதி ரீதியான நோக்கங்களைக் கொண்ட இணையக் குற்றவாளிகளால் அதிநவீன ஜீரோ-கிளிக் சுரண்டல் நுட்பங்கள் பயன்படுத்தப்படுவது குறித்த வளர்ந்து வரும் கவலைகளை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், மொபைல் இயங்குதளங்களையும் செயலிகளையும் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.