நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்…
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அமைச்சின் கீழ் செயல்படும் திணைக்களங்கள், அரச சபைகள் மற்றும் நிறுவனங்களின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நிதி மற்றும் பௌதிக முன்னேற்றம், எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான நிதி முன்மொழிவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, பொதுமக்களுக்கு விரைவாக நீதி வழங்கும் நீதிமன்ற அமைப்பை உருவாக்குவதற்காக நீதிமன்ற கட்டிட நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகம், நீதி அமைச்சுக் கட்டிடம், புதுக்கடை நீதிமன்ற வளாகம் மற்றும் காலி, மாத்தளை, கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் நிர்மாணமாகும் புதிய நீதிமன்ற வளாகங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தல நிர்மாணத் திட்டத்தையும் மீண்டும் முன்னெடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
சட்ட மாஅதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றின் மனிதவள மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு தேவையான நவீன ஆய்வுகூட உபகரணங்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் கிடைக்கப்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், மாதாந்திர பகுப்பாய்வு அறிக்கைகளின் எண்ணிக்கையை 9,000 வரை உயர்த்துவதற்கான திட்டங்களும் ஆராயப்பட்டன.
2026ஆம் ஆண்டுக்கான அதிகூடிய மூலதன நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டிடப் புனரமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள், வாகனக் கொள்வனவு மற்றும் மென்பொருள் கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.
அத்துடன், சமூதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் புனர்வாழ்வுத் திட்டங்களை பொலிஸ், சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழுச் செயலகம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் அரசகரும மொழிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பணிகளும் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டன.
அரசாங்கக் கொள்முதல் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, டிஜிட்டல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு தனித்தனி கொள்முதல் நடைமுறைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












