2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இலங்கை மீண்டும் திவாலாகும் நிலைக்கு செல்ல எந்த காரணமும் இல்லை என தெரிவி…
2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட எச்சரிக்கையை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இலங்கை மீண்டும் திவாலாகும் நிலைக்கு செல்ல எந்த காரணமும் இல்லை என தெரிவித்துள்ள அவர், நாட்டின் தற்போதைய கடன் பொறுப்புகள் நிர்வகிக்கக்கூடிய மட்டத்திலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் இலங்கை சுமார் 3.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்தியுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டில் சுமார்3.7 பில்லியன் டொலர்கடனை செலுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, 2027ஆம் ஆண்டில் கடன் மீளச் செலுத்த வேண்டிய தொகை சுமார் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராகக் குறையும்எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ள தரவுகள், இலங்கை தனது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தியவாறு கடன் பொறுப்புகளை தொடர்ந்து நிறைவேற்ற முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கடன் மீளச் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க சிரமம் ஏற்படாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்படக்கூடிய கடன் சுமைகளை சமாளிக்க அந்நியச் செலாவணி கையிருப்பை 15 பில்லியன் டொலராக உயர்த்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பது தவறான வழிகாட்டல் எனவும் சதுரங்க அபேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள், ஏற்றுமதி வருவாய், சுற்றுலா வருவாய் மற்றும் முதலீடுகள் 2026ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை மீண்டும் பொருளாதார நெருக்கடி அல்லது திவால் நிலையை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.












